ஆளுநர் பணியை மட்டும் செய்யட்டும்.. தோல்வியை பரிசளிப்பார்கள்.. தமிழிசைக்கு சேகர் பாபு பதிலடி
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் எவ்வளவு நேரம் செலவிட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு அவர் ஆளுநரா? பாஜக செய்தி தொடர்பாளரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சி மற்றும் , திமுக கூறும் திராவிட மாடல் ஆட்சி ஆகியவற்றை விமர்சித்து கருத்து கூறி வருகிறார். அவருக்கு அவ்வப்போது சேகர்பாபு பதில் அளித்து வருகிறார்.

தென் மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு குறித்து செய்தியாளர்களிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது.
தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை அதையெல்லாம் சரியாக கவனித்து கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்சனை வந்து இருக்காது. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது.
மத்திய அரசு பற்றி குறைதான் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். மத்திய அரசை குறை சொல்ல மாநிலஅரசு என்ன செய்தீர்கள்? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் எவ்வளவு நேரம் செலவிட்டார்? ஒரு இடத்தில் இருந்து நிவாரணம் கொடுப்பது முதலமைச்சரின் வேலை இல்லை. நிவாரணம் மட்டும் போதாது அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன செய்துள்ளோம் என்பது தான் முக்கியம். திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது எனவும் குற்றம் சாட்டினார் தமிழிசை சௌந்தரராஜன்.
இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சேகர்பாபு, தமிழிசை செளந்தரராஜன் பாண்டிச்சேரியுடைய ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம். அவர்களுக்கு இருக்கின்ற பணியை அவர்களை பார்க்கச் சொல்லுங்கள் என்று காட்டமாக கூறினார்.
அவர்களுடைய எதிர்கால திட்டம், தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதுதான். நிச்சயமாக எங்கு போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழக மக்கள் அவருக்கு தோல்வியை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே தமிழக மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்தனா். மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள். ஆகவே பாண்டிச்சேரிக்கு உண்டான கவர்னர் அந்த பொறுப்பிற்கு உண்டான பணிகளை மேற்கொண்டால் நல்லது என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications