பூர்வீக சொத்தை விற்கிறீர்களா? இந்த ஒரு ஆவணம் இல்லைனா மொத்த பத்திரம் பதிவும் காலி.. மக்களே உஷார்
சென்னை: இந்தியக் குடும்ப அமைப்பில் பூர்வீகச் சொத்து என்பது வெறும் நிலமோ அல்லது வீடோ மட்டுமல்ல, அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் ஒரு அடையாளம். ஆனால், இந்த சொத்துக்களை பிரிப்பதிலும், உரிமை கோருவதிலும் இன்றும் பல குழப்பங்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, ஒரு சொத்து எப்போது பூர்வீகச் சொத்தாக மாறுகிறது மற்றும் அதில் யாருக்கெல்லாம் பங்கு உண்டு என்பதைச் சட்டம் மிகத் தெளிவாக விளக்குகிறது. அதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஒரு நபருக்கு அவரது தந்தை, பாட்டனார் அல்லது பூட்டனார் ஆகியோரிடமிருந்து வழிவழியாக வந்து சேரும் சொத்தே பூர்வீகச் சொத்து எனக் கருதப்படுகிறது. பொதுவாக, 4 தலைமுறைகளுக்கு மேலிருந்து வந்த, மேலும் குடும்பப் பிரிவினை செய்யப்படாமல் தொடரும் சொத்துக்கள் பூர்வீக சொத்தாகக் கருதப்படுகின்றன. ஒருமுறை சட்டப்படி பாகப்பிரிவினை செய்யப்பட்டுவிட்டால், அதன் பின் அந்தச் சொத்தின் பூர்வீகத் தன்மை மாறக்கூடும்.

தந்தை தானாக சம்பாதித்த சொத்து அதாவது சுயார்ஜிதச் சொத்துக்களை, அவர் காலத்திற்கு பிறகு பிள்ளைகளுக்கு சேரும்போது அது தானாகவே பூர்வீகச் சொத்தாக மாறாது. மாறாக, அது வாரிசுரிமை சொத்தாகவே கருதப்படும்.
அதென்ன பூர்வீக சொத்து? அதன் உரிமைகள்?
முன்பு பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு மட்டுமே பிறப்பால் உரிமை இருந்தது. ஆனால், 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமை சட்ட திருத்தம் இந்த பாரபட்சத்தை களைந்தது. இப்போது, ஒரு குடும்பத்தில் பிறக்கும் மகன்களுக்கு சமமாக மகள்களுக்கும் பூர்வீக சொத்தில் சம உரிமை உண்டு. அவர்கள் திருமணமானவர்களா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மகள்களுக்கு பிறப்பிலேயே இந்த உரிமை உண்டு, தந்தை உயிருடன் இருந்தாரா இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால், ஏற்கனவே சட்டப்படி பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துகளை மீண்டும் திறந்து கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனைகள், கட்டுப்பாடுகள்
பூர்வீக சொத்தை பொறுத்தவரை, ஒரு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அதை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய முடியாது என்று பொதுவாக கருதப்படுகின்றது. ஆனால், குடும்பத்தின் அவசியத் தேவைகள், கடன் தீர்ப்பு அல்லது சொத்து பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, குறிப்பிட்ட சட்ட நிபந்தனைகளின் கீழ் விற்பனை செய்ய முடியும்.
அதே நேரத்தில், மற்ற வாரிசுகளின் சம்மதம் இல்லாமல் செய்யப்பட்ட விற்பனை, அவர்கள் விரும்பினால் நீதிமன்றத்தில் சவால் செய்யப்படலாம். குறிப்பாக, மைனர் வாரிசுகளின் நலன் பாதிக்கப்படுகிறதா என்பதும் முக்கியமாக பார்க்கப்படும்.
ஒரு வாரிசு தனது பங்கை பிரிக்கக்கோரி கோர்டை அணுகினால், சட்டப்படி பாகப்பிரிவினை செய்த பின்னரே அந்தச் சொத்தில் தனிப்பட்ட உரிமைகள் தெளிவாக அமையும்.
பட்டா சிட்டா - நன்மைகள்
பூர்வீகச் சொத்துக்கள் ஒரு குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இவற்றை முறையாகப் பராமரிக்க, வருவாய்த் துறை ஆவணங்களான பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றில் வாரிசுகளின் பெயர்களைச் சேர்ப்பது அவசியம்.
சொத்துக்களை பிரிக்கும்போது Partition Deed பாகப்பிரிவினை ஆவணம் தயார் செய்து அதைப் பதிவு செய்வது பிற்காலத் தகராறுகளை தவிர்க்க உதவும். வாய்மொழியாகப் பிரித்துக் கொள்வதும் சில சூழ்நிலைகளில் சாத்தியமானதாக இருந்தாலும், பதிவு செய்யப்பட்ட ஆவணம் தான் அதிக பாதுகாப்பை வழங்கும்.
மொத்தத்தில் பூர்வீகச் சொத்து என்பது தனிமனித விருப்பத்திற்கு உட்பட்டது கிடையாது.. அது வாரிசுகள் அனைவருக்கும் உரிய பொதுவான உரிமை. சட்ட விதிகளை சரியாக புரிந்துகொண்டு, சுமுகமாக பங்கீடு செய்து கொள்வதே குடும்ப உறவுகளையும் சொத்தின் மதிப்பையும் காக்க சிறந்த வழியாகும்...!!!












Click it and Unblock the Notifications