வாய்க்கொழுப்பு கூடிப்போச்சு..அண்ணாமலை அடக்கணும்..திட்டித்தீர்த்த செல்லூர் ராஜூ
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வாய்கொழுப்புடன் பேசி வருவதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகளைத் தாண்டி பாஜக ஒருபோதும் வளரமுடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். பாஜகவிற்கு சகிப்புத்தன்மை இல்லை என்றும் அதுவே அந்த கட்சி தமிழ்நாட்டில் வளரமுடியாமல் போனதற்குக் காரணம் என்றும் கூறினார்.
அதிமுக பாஜக இணைந்து கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலை சந்தித்தன. பெரிய அளவில் அதிமுகவிற்கு பயன் இல்லை என்றாலும் 4 எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்பியது பாஜக. வரும் லோக்சபா தேர்தலிலும் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி நீடிப்பதாக அரசியல் கட்சித்தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து சில நிர்வாகிகள் விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் இணைந்து வருகின்றனர். இதனைக் கண்டித்து பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்களை எரித்தனர். இதற்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பதிலுக்கு அதிமுகவினர் அண்ணாமலையில் படத்தை எரித்து கைது செய்யப்பட்டனர்.
கூட்டணி கட்சியான பாஜகவில் இருந்து அதிமுகவில் நிர்வாகிகள் இணைவதற்கு வானதி சீனிவாசன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் கருத்துக்களை கூறி வருகின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன் என்று கூறினார்.
நான் தலைவன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே நான் இருப்பேன். சில முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்க தான் செய்யும். கட்சி அதிர்வுகளை சந்தித்து கொண்டு தான் இருக்கும். அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இப்போது பார்த்த வினையின் எதிர்வினை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நடக்கலாம்.
அரசியல் கட்சி அப்படி தான் வளர முடியும். கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது. யார் விலகினாலும் வாழ்த்தி வழி அனுப்புவேன் என்றார். நான் தலைவன், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பேன். நான் எதற்கும் கவலைப்பட போவதில்லை, கட்சி அதிர்வுகளை சந்திக்கும் என்றார்.
தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை;ஜெயலலிதா, கருணாநிதி எப்படி முடிவு எடுப்பார்களோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும். தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை. பாஜகவை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே என் நோக்கம். தமிழக அரசியலில் புதிய மாற்றம் தேவை, அதை பாஜக கொண்டு வரும். இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. தனித்து போட்டியிட நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்போம் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகளைத் தாண்டி பாஜக ஒருபோதும் வளரமுடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். பாஜகவிற்கு சகிப்புத்தன்மை இல்லை என்றும் அதுவே அந்த கட்சி தமிழ்நாட்டில் வளரமுடியாமல் போனதற்குக் காரணம் என்றும் கூறினார். பாஜகவிற்கு தகுதி இல்லை என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு யாரும் பிறக்கவில்லை, யாருக்கும் தகுதியில்லை என்றும் செல்லூர் ராஜூ என்று கூறினார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகமாகிவிட்டது. அதனால்தான் அவர் அப்படி பேசி வருகிறார். வாய் கொழுப்பை அடக்கினால் சரியாகி விடும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அதிமுக, பாஜக இடையே முட்டல் மோதல் அதிகரித்து வரும் நிலையில் லோக்சபா தேர்தல் கூட்டணியில் பாதிப்பு எதுவும் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் கூட்டணியில் பாதிப்பு இல்லை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுக பாஜக கூட்டணியில் பாதிப்பு வர வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications