ஆன்லைன் தேர்வுகளுக்கு முற்றுப்புள்ளி! அண்ணா பல்கலை. அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!
சென்னை: மாணவர்கள் இனி ஆன்லைனில் தேர்வு எழுதக் கூடாது என்றும் நேரடியாகவே இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வருடமாக கொரோனா அச்சம், ஊரடங்கு காரணமாக பால்வாடி முதல் பல்கலைக் கழகம் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்று வந்தது. ஆன்லைன் வகுப்பிலும், தேர்விலும் பங்கேற்றாலும் பங்கேற்காவிட்டாலும் ஆல்பாஸ் ஆகி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டனர்.

கொரோனா 3வது அலை வரும் என்ற அச்சத்திலேயே பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தியில் பொறியியல் மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறாது என்றும் நேரடியாகவே நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
சில தனியார் கல்லூரி நிர்வாகங்கள் இந்த ஆண்டும் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வேல்ராஜ் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். மாணவர்கள் நேரடியாகத் தேர்வு எழுதினால்தான் சரியாக இருக்கும் என தெரிவித்தார் வேல்ராஜ்.
மேலும் இந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்திக்கும் மறுப்புத் தெரிவித்து அதுபோன்ற புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் மாணவர்கள் தெளிவு பெற்றுள்ளனர்.
எது எப்படியோ ஆன்லைனில் அங்குமிங்குமாக புத்தகங்களை வைத்து தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கு இனி வரும் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்ற செய்தி சற்று அதிர்ச்சியாகத்தானே இருக்கும்!
எனவே அடுத்து வரும் நாட்களில் மாணவர்கள் செல்போன்களை ஓரம்கட்டிவிட்டு புத்தகங்களை மடியில் வைக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது












Click it and Unblock the Notifications