ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வு அறிக்கையின் நூற்றாண்டு! தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் கருத்தரங்கு
சென்னை: சிந்து சமவெளி விட்ட காலமும், சங்க காலம் தொடங்கிய காலமும் ஒரே புள்ளிதான் என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டிஷ் ஆய்வாளர் சர் ஜான் மார்ஷல்லின், ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ அகழாய்வு அறிக்கையின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வரும் வெள்ளிக்கிழமை கருத்தரங்கை நடத்துகிறது.
இது குறித்து இந்த அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "சர் ஜான் மார்ஷல் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் அறிக்கையை 21 செப்டம்பர் 1924இல் வெளியிட்டார். அந்த அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உலகுக்கு அறிவித்தார். இந்த அறிவிப்பு செய்து நூறு ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ் மரபு அறக்கட்டளை, பச்சையப்பன் கல்லூரிகள் அறக்கட்டளையுடன் இணைந்து சிந்துவெளி நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கினை வருகின்ற 23 ஆகஸ்ட் 2024ஆம் நாள், வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி வளாகத்தில் நடத்தவிருக்கிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் சுபாஷிணி இந்த நிகழ்ச்சியைத் தலைமை ஏற்று நடத்துகிறார்.
இக்கருத்தரங்கில் சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மானிடவியல் ஆய்வாளர் முனைவர் பக்தவத்சல பாரதி, ஊடகவியலாளர் ஐயன் கார்த்திகேயன், சூழலியலாளர் முனைவர் அரசு செல்லையா, ரோஜா முத்தையா நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் ஆகியோர் உரையாற்ற இருக்கிறார்கள்.
இக்கருத்தரங்கில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. சங்கம்பீடியா வலைப்பக்கம் வெளியீடும் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், "சங்க இலக்கியம், சிந்து சமவெளி நாகரிகம் குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதன் மூலம் பண்பாட்டு ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும். சாமானிய மக்களுக்கும் சிந்து சமவெளி குறித்த ஆய்வை கொண்டு சேர்க்க முயன்று வருகிறோம்.
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது. காலநிலை மாற்றத்தால் அங்கிருந்த மக்கள் மெல்ல இந்தியா முழுக்க பரவினர். இந்த காலத்தையும், சங்க இலக்கிய காலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் ஒரு புள்ளியில் இணைகிறது. இதைதான் நாங்கள் இளைய தலைமுறையினருக்கு சொல்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications