எடப்பாடி நடத்திய மீட்டிங்.. முதல் வரிசையில் செங்கோட்டையன்.. முடிவுக்கு வந்ததா பனிப்போர்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி நடத்திய அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் செங்கோட்டையன். இதன் மூலம் பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில வாரங்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்வதையே தவிர்த்து வந்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாமல் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார் செங்கோட்டையன்.

எடப்பாடி - செங்கோட்டையன் பனிப்போர்
இதையடுத்து, அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவை தனியாக சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துவதாகவும் பேசப்பட்டது.
அண்மையில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்த நிலையில், செங்கோட்டையனையும் சமரசம் செய்து வைத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்ததாக கூறினார். அப்போதும் எடப்பாடியார் என பெயரைக் குறிப்பிடவில்லை.
எடப்பாடி கொடுத்த விருந்து
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, தனது இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து அளித்தார். எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்த இந்த விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இதனால், மீண்டும் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி மோதல் தொடர்பான பேச்சுகள் எழுந்தன.
இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பான மானியக் கோரிக்கை குறித்த விவாதத்தின் போது பேசிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசினார். எடப்பாடியாரை வணங்கி உரையை ஆரம்பிப்பதாக செங்கோட்டையன் குறிப்பிட்டார் "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரை வணங்கி உரையைத் தொடங்குகிறேன்" எனத் தெரிவித்தார் செங்கோட்டையன்.

செங்கோட்டையன் மன மாற்றம்
செங்கோட்டையன் இவ்வாறு பேசியது அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் ஆளுங்கட்சி மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதா எனப் பலரும் புருவம் உயர்த்தினர். செங்கோட்டையனின் இந்த மன மாற்றத்துக்கு பின்னணியில் பாஜகவின் கை இருப்பதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில், நேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
முதல் வரிசையில் செங்கோட்டையன்
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சிப் பணிகள், பூத் கமிட்டி குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications