சூத்திரதாரி விஜய்.. ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த செங்க்ஸ்! சோலி முடிஞ்சு.. அடித்துக் கொள்ளும் அதிமுக!
சென்னை: எதிர்பார்த்தபடி அதிமுக மீண்டும் ஒரு பிளவை சந்தித்து இருக்கிறது. அதிமுகவின் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் எஸ் பி வேலுமணி தலைமையில் திரண்டு எடப்பாடிக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் செங்கோட்டையன் ஏற்பாட்டில் தான் இந்த பிளவு ஏற்பட்டதாகவும், விஜய்க்கு ஆதரவு தருவது அவர்களது திட்டம் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர். மேலும் சபாநாயகரை வரவேற்று எஸ்பி வேலுமணி பேசியதையும் எடப்பாடிக்கு இணையாக எஸ்பி வேலுமணிக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கியதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சேர்ந்தே இருப்பது அதிமுகவும் பிளவும் என்பது மீண்டும் ஒருமுறை உண்மையாகி இருக்கிறது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி - ஜெயலலிதா அணி என பிரிந்த அதிமுக, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அடுத்தடுத்து பல முக்கிய தலைவர்களை இழந்தது.

அதிமுக பிளவு
சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் என அந்த பட்டியல் பெரிதாகிக் கொண்டே சென்றது. இந்த நிலையில் தற்போது அந்த கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாமல் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் படுதோல்வியை சந்தித்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததும், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேராததும் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் அதிமுகவின் கட்டுப்பாட்டை எடப்பாடி பழனிச்சாமி எடுத்த பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கு தோல்வியே மிஞ்சியது. 11 தோல்வி பழனிச்சாமி என விமர்சனமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும்பான்மையின்றி தவித்த நிலையில் அதிமுக முதல் கட்சியாக ஆதரவளித்து இருந்தால் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பு இருந்தது.
சிவி சண்முகம்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் பரம எதிரியான திமுகவுடன் கூட்டணி சேலாம் என சொன்னதால் கொதித்துப்போன சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் தனி அணியாக கிளம்பி இருக்கின்றனர். நேற்று சட்டசபை தற்காலிக சபாநாயகர் இடம் மனு ஒன்றையும் அளித்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம் அதிமுக எந்த கூட்டணியிலும் இல்லை. விஜய்க்கு ஆதரவு தருகிறோம். எஸ்பி வேலுமணி சட்டசபை குழு தலைவராகவும் கொறடவாக சி விஜயபாஸ்கர் இருப்பார்கள் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
செங்கோட்டையன்
அதே நேரத்தில் எடப்பாடி தரப்பில் இருக்கும் 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி தான் சட்டசபை குழு தலைவர் என சபாநாயகர் இடம் மனு அளித்தனர். இந்த நிலையில் இந்த பிளவுக்கு காரணம் செங்கோட்டையன் தான் என்கின்றனர். தற்போது விஜய்க்கு கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தந்திருக்கின்றன. அதே நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் விஜயின் சில முடிவுகளை முன்வைத்து விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்டவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும்.
விஜய் அரசியல்
இதனால் எதற்கும் இருக்கட்டும் என அதிமுகவை சேர்ந்த சில எம்எல்ஏக்களிடம் பேசி வைத்திருந்தார் செங்கோட்டையன். ஆனால் அதற்கு தேவையில்லாமல் போனது. இருந்த போதும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அதிமுகவினர் தங்கள் பக்கம் இருப்பது நல்லது தான் என திட்டம் தீட்டிய செங்கோட்டையன் விஜய் ஒப்புதலுடன் அதிமுகவினருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படும் என பேசினாராம்.
ஜேசிடி பிரபாகர்
இதனை முன் வைத்து தான் தற்போது சிவி சண்முகம் உள்ளிட்டோர் புயலை கிளப்பி இருக்கின்றனர் என்கின்றார்கள் விவரம் அறிந்த அதிமுகவினர். மேலும் விஜய் ஒப்புதல் உடன் தான் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை இன்றைய சட்டசபை நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சொல்கின்றனர். சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பொறுப்பேற்றதும் அவரை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
எஸ்பி வேலுமணி
உதயநிதி ஸ்டாலின் பேசியதும் எடப்பாடி பேச அழைக்கப்பட்டார். அப்போது எஸ்பி வேலுமணி தானும் பேச வேண்டும் என கையை உயர்த்திய நிலையில் அவர் பேச அனுமதி தந்தார் சபாநாயகர். வழக்கமாக சபாநாயகரை வரவேற்று ஒரு கட்சியில் இருந்து ஒருவர் மட்டுமே பேசுவார்கள். ஆனால் அதிமுக தரப்பில் இரண்டு பேர் பேச அனுமதிக்கப்பட்டது. அதேபோல எதிர்க்கட்சி வரிசையில் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
உடைந்த அதிமுக
ஆனால் அதிமுக தரப்பில் சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் அந்த வரிசையில் எஸ்பி வேலுமணிக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அதிமுக பிளவு என்பது செங்கோட்டையன் மூலம் விஜய் திட்டமிட்டது தான் எனவும், சொல்லப்போனால் எஸ்பி வேலுமணியை தான் அதிமுகவாக சபாநாயகர் அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications