“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன்
சென்னை: "சசிகலா, தினகரன், ஓபிஎஸ், பிரேமலதா என அனைவருக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி கூறினார்; அவர் என்ன பாவம் செய்தார்?" என தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து வருவதாக அக்கட்சியின் நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், "தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத அளவுக்கு நமது தலைவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆதரவு மற்ற அரசியல் கட்சிகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார். மேலும், மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். இந்த வெற்றி தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும். கட்சியின் திட்டங்கள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகள் பொதுமக்களின் ஆதரவை பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.
தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், " தவெக தலைவர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டிய நேரம் வர வேண்டும். சரியான நேரத்தில் தலைவர் நிச்சயமாக மக்களையும் ஊடகங்களையும் சந்திப்பார். அவர் எப்போதும் மக்களின் நலனையே முன்னிலைப்படுத்துகிறார்" என்றார்.
மேலும் பேசிய செங்கோட்டையன், "சசிகலா, தினகரன், ஓபிஎஸ், பிரேமலதா என அனைவருக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி கூறினார்; அவர் என்ன பாவம் செய்தார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக. பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை அதிமுகவை அதிகமாக சீண்டி வந்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக.
அதன்பிறகு சட்டசபை தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது பாஜக. அப்போது, அண்ணாமலையை தலைவர் பதவியை விட்டு நீக்கினால் கூட்டணிக்கு தயார் என எடப்பாடி பழனிசாமி கட் & ரைட்டாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து, அண்ணாமலை பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பாஜக - அதிமுக கூட்டணி அமைந்தது. இந்நிலையில் தான் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications