செங்கோட்டையன் அப்செட்டா.. தவெக தேர்தல் அறிக்கை நிகழ்ச்சிக்கும் போகலயே.. இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: செங்கோட்டையன் தவெகவில் இருந்து விலகும் மனநிலையில் இருக்கிறார் என்றும், நான் செய்த தவறை நீங்களும் செய்துவிடாதீர்கள் என்று அதிமுக முக்கிய தலைவர்களிடம் கூறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இது பேசுபொருளான நிலையில் அதற்கு ஏற்ப செங்கோட்டையனும் நேற்று தவெக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் பங்கேற்காமல் போனது மேலும் பேசுபொருளாகி இருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 8 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் அவரை கட்சியில் இருந்தே நீக்கி எடப்பாடி நடவடிக்கை மேற்கொண்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

செங்கோட்டையன் விலக போகிறார்?
விஜய்யும் செங்கோட்டையனுக்கு தவெக மாநில தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்தார். தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததை அடுத்து பம்பரமாக சுழன்று வருகிறார். விஜய்யின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி கேட்பது முதல் அதிமுகவில் இருந்து அதிருப்தி நிர்வாகிகளை தவெகவில் இணைப்பது என அடுத்தடுத்து கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
எனினும் தவெகவில் புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுக்கு தான் அதிக மதிப்பு இருப்பதாகவும், செங்கோட்டையனுக்கு தவெகவில் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றும் அரசியல் விமர்சர்கள் பலரும் சொல்லி வந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், செங்கோட்டையன் தவெகவில் இருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக கூறினார்.
தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்வில் பங்கேற்கவில்லை
எம் ஆர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- செங்கோட்டையன் தவெகவில் இருந்து வெளியேறும் மனநிலையில் இருக்கிறார். தான் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டேன் என்றும், அந்த தவறை நீங்களும் செய்துவிடாதீர்கள் என்றும் அதிமுக முக்கிய தலைவர்கள் சிலரிடம் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அந்தக் கட்சியில் செங்கோட்டையனுக்கு உரிய மரியாதை இல்லை.." என்று கூறினார். இது அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ஏற்றார்போலவே நேற்று தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் தவெக தலைவர் விஜய், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் போன்ற நிர்வாகிகள் பலரும் பங்கேற்ற நிலையில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. எம் ஆர் விஜயபாஸ்கர் இப்படி கூறியிருந்த நிலையில் செங்கோட்டையன் தவெக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் பங்கேற்காமல் போனது மேலும் பேசுபொருளானது.
செங்கோட்டையன் தரப்பு விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் செங்கொட்டையன் நேற்று ஏன் பங்கேற்கவில்லை என்ற விவாதம் தவெகவினர் மத்தியிலும் அதிகரித்தது. எனினும், இதனை திட்டவட்டமாக மறுக்கும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள், கொங்கு மண்டலத்தில் தவெகவை வெற்றி பெற வைக்க கடுமையாக செங்கோட்டையன் உழைத்து வருகிறார். தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பதால்தான் அவர் தவெக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்று கூறுகிறார்கள்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, செங்கோட்டையனும் நேற்று தவெக வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஈரோட்டில் நேற்று பரப்புரை செய்த செங்கோட்டையன், தளபதி விஜய் தான் ஆட்சிக்கு வருவார் என்றும், மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டேன் என்று சொன்ன தலைவர் எங்க தலைவர்.. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறினார்.














Click it and Unblock the Notifications