சோலி முடிஞ்சு..குட்டையை குழப்பிய பாஜக.. ஏக குழப்பத்தில் செங்கோட்டையன்! மாறி மாறி பேச இதுதான் காரணம்!
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசியதால் பதவியை இழந்திருக்கிறார் அதிமுக சீனியர் ஆன செங்கோட்டையன். இந்த நிலையில், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தைத் தான் சந்திக்கவே இல்லை எனக் கூறியிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர்களையெல்லாம் செங்கோட்டையன் சந்தித்தது உண்மைதான் எனவும், முதல் நாள் சந்தித்துவிட்டு அடுத்த நாள் சந்திக்கவில்லை என ஏன் இவ்வாறு பேசுகிறார் எனத் தெரியவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது இருக்கும் அதிமுக சீனியர்களில் முக்கியமானவர், மிக மூத்தவர் என்றால் அது செங்கோட்டையன்தான். பெரும்பாலான அதிமுக சீனியர்கள் திமுக தரப்பில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில், ஒரு சிலர் மட்டுமே அதிமுகவில் இருக்கின்றனர்.
தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் முக்கியமானவர்கள். அந்த வகையில், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முகமாகவும், எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாகவும் இருந்தவர் செங்கோட்டையன்.

செங்கோட்டையன்
பழுத்த அரசியல்வாதி; அவசரப்பட்டு எதையும் பேச மாட்டார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் பண்புடன் நடந்துகொள்பவர் என அவருக்கு அரசியலில் நல்ல பெயர் உண்டு. ஜெயலலிதா காலத்தில் உச்சத்தில் இருந்தபோது ஓரம் கட்டப்பட்ட அவர், அதற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தஞ்சம் புகுந்தார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக முதலமைச்சராக வேண்டியவர் செங்கோட்டையன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில், சில காரணங்களால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவி ஏற்ற நிலையில், செங்கோட்டையனை ஓரம் கட்ட ஆரம்பித்தார். இதனை செங்கோட்டையன் அவ்வளவாக ரசிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்த அவர், சசிகலா உள்ளிட்டோருடன் மறைமுகத் தொடர்பில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் பேசியது எடப்பாடி பழனிசாமியை ஆத்திரத்தில் ஆழ்த்தியது.
செங்கோட்டையன் பதவி இழப்பு
இதனால் செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்திருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில், அதிமுக ஒன்று சேர வேண்டும் எனக் கெடுவிதித்த செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டு அமித்ஷாவை சந்தித்தார். அதற்குப் பிறகு டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரையும் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், சந்திப்பு நிகழ்ந்த அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்திக்கவே இல்லை எனக் கூறியதோடு, என்னைக் குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
தினகரன் சந்திப்பு
இந்த நிலையில், ஆதரவாளர்களிடம் பேசிய போது சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்." அமித்ஷா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தது உண்மைதான். சசிகலா தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுகவை மீண்டும் உருவாக்க ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக சசிகலா, செங்கோட்டையன், ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தனர். பாஜக தலைமை கடைசி நேரத்தில் கைவிட்டதால் அந்தச் செய்தியாளர் சந்திப்பு நடக்க முடியாமல் போனது.'
பாஜக அமித்ஷா
அதே நேரத்தில் தன்னைத் தூண்டிவிட்ட பாஜக இப்போது அமைதியாக இருப்பதால் செங்கோட்டையன் அதிர்ச்சியில் இருக்கிறார். நேற்று கூட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை நேரில் சந்தித்துப் பேசிய நிலையில், பன்னீர்செல்வத்தை சந்திக்கவே இல்லை என செங்கோட்டையன் பேசுவது ஏன் எனத் தெரியவில்லை. கடந்த சில நாட்களாகவே குழப்பத்தில் இருக்கும் செங்கோட்டையன் அடுத்து என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் திணறுகிறார். இந்தக் குழப்பத்தில் தான் அவர் மாறி மாறி பேசி வருகிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications