சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா
சென்னை: அதிமுகவில் குழப்பம் தொடர்ந்து வருகிறது. எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் இடையே உட்கட்சி மோதல் தொடரும் நிலையில், இன்று மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் தவெகவில் இணையவுள்ள நிலையில், இதில் மூத்த தலைவரும் வருவாய்த் துறை அமைச்சருமான செங்கோட்டையனுக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், அதிமுகவில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டு இருக்கிறது.

3 அதிமுக எம்எல்ஏக்கள்
எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் இன்று தங்களின் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தவெகவில் இணைகிறார்கள். இதன் பின்னணியில் கே.ஏ.செங்கோட்டையன் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக நடந்த விஷயங்களை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதுதான் நமக்கு தெரிய வருகிறது.
இன்றைய தினம் மரகதம் குமரவேல் (மதுராந்தகம் எம்எல்ஏ), ஜெயக்குமார் (பெருந்துறை எம்எல்ஏ), சத்யபாமா (தாராபுரம் எம்எல்ஏ) ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த 3 பேரின் ராஜினாமா கடிதங்களும் சபாநாயகர் கைகளுக்குச் சென்றுள்ளது அதிமுகவை நிலைகுலைய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
செங்கோட்டையன்
முன்னதாக நேற்றைய தினம் மூத்த அமைச்சரான செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் மருத்துவ செக் அப்பிற்காக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார். அப்படியிருக்கச் சட்டென அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மேலும், வீட்டில் ஓய்வு கூட எடுக்காமல் சட்டென விமானம் மூலம் சென்னைக்கும் வந்து இறங்கினார்.
என்ன நடந்தது!
அவர் சென்னையில் கால் வைத்த சில மணிநேரங்களிலேயே இந்த 3 எம்எல்ஏக்களும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதாவது செங்கோட்டையன் கோட்டைக்கு வரும் வரையிலும் இவர்கள் யாரும் ராஜினாமா கடிதத்தைத் தரவில்லை. ஆனால், செங்கோட்டையன் வந்த பிறகே இந்தப் படலம் ஆரம்பித்தது. இவர்கள் ராஜினாமா கடிதத்தை அளிக்கும் போது கூட, அங்கு செங்கோட்டையனுடன் இருந்தார்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வந்தவர். அவருக்கு இன்னுமே அதிமுகவில் பல நிர்வாகிகளுடன் தொடர்பு இருக்கலாம். இதன் காரணமாக அவரே காய்களை நகர்த்தி மூவரையும் தூக்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கவனிக்க வேண்டியவை
இதில் மற்றொரு கவனிக்க வைக்கும் விஷயமும் இருக்கிறது. அதாவது எஸ்பி வேலுமணி தரப்பு என்னதான் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தாலும் அவர்களுக்கு விஜய் தரப்பு அமைச்சரவையில் இடம் தரவில்லை. இதனால் கோவை சிறுமி பாலியல் விவகாரத்தில் கூட விஜய் அரசை வேலுமணி மிகக் கடுமையாகச் சாடி அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கை வந்து சில மணி நேரத்திலேயே வேலுமணி ஆதரவாளர்களே தவெகவில் ஐக்கியமாகிறார்கள். இந்த 3 பேரின் அதிரடி ராஜினாமா பேரிடியாகவே இருக்கும்.
ராஜினாமா காரணமாக இடைத்தேர்தல் நடக்கும்போது மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவருக்குமே அதே தொகுதியில் தவெக சார்பாக மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இம்முறை அவர்கள் தவெகவின் அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தில் களம் காணப் போகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து மேலும் பல எம்எல்ஏக்கள் தவெகவை நோக்கிப் படையெடுக்கத் தயாராகக் காத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
யாருக்கு லாபம்!
இந்த அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சிகள் அதிமுகவுக்கு குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு மிக பெரிய அடியாக இருக்கும். இதன் மூலம் அதிமுகவின் பலம் 47ல் இருந்து 45ஆக குறைந்துள்ளது. மறுபுறம், தற்போது கூட்டணிக் கட்சிகளின் தயவோடு (108 இடங்கள் பெற்று) தமிழ்நாட்டை ஆண்டுவரும் முதலமைச்சர் விஜய்யின் தவெகவிற்கு இது ஒரு இமாலயப் பலம். வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றால், அது விஜய்யின் அரசை 118 என்ற மேஜிக் நம்பரை மேலும் நெருங்க வைக்கும்!












Click it and Unblock the Notifications