ஆபரேசனை ஆரம்பித்த செங்கோட்டையன்! அதிமுக மூத்த தலைவர்களுக்கு வலை! ஆதரவாளர்கள் ரெடி! ராஜ்யசபா போஸ்ட்?
சென்னை: என்ன நடக்கிறது என தெரியாமலேயே குழப்பத்தில் இருக்கிறது தமிழக அரசியல் களம்.யாரும் எதிர்பாராத விதமாக தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் உருவாகி இருக்கிறது. ஆட்சி அமைக்க கூடுதலாக 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களோடு ஆதரவு தந்திருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு செங்கோட்டையன் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் தோற்ற முன்னாள் அமைச்சர்களுக்கு ராஜ்யசபா எம்பி தருவதாகவும், எம்எல்ஏக்களை அழைத்து வந்தால் அவர்களுக்கு அமைச்சர் பதவி என ஆபரேஷனை தொடங்கி இருப்பதாக சொல்கின்றனர்.
தமிழகம் இவ்வளவு ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். மே 4ஆம் தேதிக்கு முன்பு வரை தமிழக வெற்றி கழகம் 10 முதல் 15 சதவீத வாக்குகளை பெறும், 1 அல்லது 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறலாம் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும், ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் சொல்லி வந்தனர்.

இரண்டாவது முறையாக திமுக ஆட்சியமைக்கப் போவது உறுதி என நம்பி இருந்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான நான்காம் தேதி பல அரசியல் திருப்பங்கள் அரங்கேறியது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வந்தது. திமுகவால் வெறும் 57 எம்எல்ஏக்களை மட்டுமே பெற முடிந்தது.
இதனால் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக மாறி உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இருந்த போதும் விஜய்க்கு தனி பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளை அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முந்தி கொண்ட அந்தக் கட்சி ஐந்து எம்எல்ஏக்களுடன் ஆதரவு கடிதத்தை வழங்கியிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க அதிமுக விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு குழு கிளம்பி இருக்கிறது. சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, கே.சி கருப்பண்ணன், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக திரண்டு இருக்கின்றனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன் தனது வேலையை தொடங்கி இருக்கிறார்.
கொங்கு மண்டலம், வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தனக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தேர்தலில் தோற்ற தங்கமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோரையும் அவர் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் சொல்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் இல்லை.
தேர்தலில் தோற்றவர்களுக்கு ராஜ்யசபா எம்பி சீட், இடைத்தேர்தல்களில் வாய்ப்பு என பேசுவதோடு முக்கிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையனின் ஆதரவாளான சத்தியபாமா உள்ளிட்டோர் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் நிலையில், பல முன்னாள் அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.
இதற்கு பாஜக கூட்டணியும் எடப்பாடி பழனிச்சாமியின் தவறான முடிவுகள் தான் காரணம் என சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், தமிழக வெற்றிக்கழகத்திற்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பொறுப்பு வழங்கப்படும் என சில எம்எல்ஏ முன்னாள் எம்எல்ஏக்களிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனின் இந்த ஆபரேஷன் குறித்து கேள்விப்பட்டதிலிருந்து மேலும் அதிர்ச்சியில் இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.














Click it and Unblock the Notifications