ஓடி வந்த செங்கோட்டையன்.. எடப்பாடி பழனிசாமி திடீர் வாழ்த்து! ஓஹோ! இப்படி ஒரு கணக்கு இருக்கோ?
சென்னை: சமீப காலங்களாக எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே உரசல்கள் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது திடீரென எடப்பாடி பழனிசாமியின் பயணத்திற்கு செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
நேற்றுவரை முட்டல் மோதல்கள் இருந்த நிலையில், திடீரென எடப்பாடிக்கு செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்திருப்பது கட்சிக்குள் நிர்வாகிகள் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

எடப்பாடியின் அரசியல் பயணம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் இருக்கின்றன. எனவே அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்காளர்களை சந்தித்து வருகின்றன. களத்தில் புதியதாக தமிழக வெற்றிக்கழகம் முளைத்திருப்பதால், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி அதிகரித்திருக்கிறது. இந்நிலையில்தான் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க செய்யவும் எடப்பாடி பழனிசாமி அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
கொங்கு டூ டெல்டா
ஜூலை.7ம் தேதி தொடங்கிய இந்த பயணம் வரும் ஜூலை.23ம் தேதி பட்டுக்கோட்டையில் முடிவடைகிறது. இந்த முதற்கட்ட சுற்றுப்பயணத்தில் மொத்தம் 33 சட்டமன்ற தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி கவர் செய்கிறார். தொகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களின் பிர்ச்சனைகளை கேட்டு பெற இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் தொடங்கி, டெல்டா மாவட்டத்தில் இந்த பயணம் முடிவடைகிறது. கொங்கு மாவட்டங்களில் வரவேற்பு பலமாக இருந்தது.
செங்கோட்டையன்
ஆனால், டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இருக்குமா? என்பது கேள்விக்குறியாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் செங்கோட்டையனின் நகர்வு மீது எடப்பாடி ஒரு கண் வைத்து வருகிறார். இந்த முதற்கட்ட பயணத்திற்கு செங்கோட்டையன் தரப்பிலிருந்து வாழ்த்துகள் ஏதும் வரவில்லை. இதை நோட் செய்து வைத்த அவர், அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என பொறுத்திருந்திருக்கிறார்.
நோட் போட்ட எடப்பாடி
இப்படி இருக்கையில்தான் இரண்டாம் கட்ட பயணத்திற்கு செங்கோட்டையன் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அத்திக்கடவு அவிநாசி விவகாரத்தில் விவசாயிகள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரியில் பாரட்டுவிழா எடுத்திருந்தனர். அந்த விழாவுக்கான அழைப்பிதழில் பெயர் போடாதவர்களெல்லாம் விழாவில் பங்கேற்றிருந்தார்கள். ஆனால், பெயர் போட்டிருந்தும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. மட்டுமல்லாது விழாவில் "புரட்சித் தலைவி, புரட்சித் தலைவர் படங்கள் போடாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது" என்று வெடித்திருந்தார்.
ஓரம் கட்டப்பட்ட செங்கோட்டையன்
இது ரராக்கள் மத்தியில் பேசுபொருளாகியிருந்து. சாந்த சொரூபியானவர் திடீரென வெடித்து கிளம்பியது ஏன்? என்று பலரும் விவாதிக்க தொடங்கியிருந்தனர். செங்கோட்டையனுக்கு சமீப காலமாகவே அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை கொடுக்காமல் ஓரம் கட்டியதால்தான் அவர் வெடித்திருக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர்.
தலைமை நிலைய செயலாளர் பதவிக்கு பதில், அமைப்பு செயலாளர் என டம்மி போஸ்ட், நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான ஆய்வு குழுவில் செங்கோட்டையன் பெயர் இல்லாதது, செங்கோட்டையன் சொந்த மாவட்டத்தில் வேலுமணியை கள ஆய்வாளராக நியமித்தது இப்படி தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விடப்பட்டதால் சீறியிருக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது திடீரென எடப்பாடிக்கு வாழ்த்து சொல்வது எதற்காக என்று கேள்வி எழுந்திருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், செங்கோட்டையனை வேட்பாளர் பட்டியலிலிருந்து கழற்றிவிட பேச்சுக்கள் அடிபட்டு வருவதாகவும், எனவேதான் எடப்பாடியிடம் அவர் சராணாகதி அடைந்திருக்கிறார், அதன் வெளிப்பாடுதான் இந்த வாழ்த்து என்றும் நிர்வாகிகள் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் நிலைமை யாருக்கு சாதகமாக காற்று வீசுகிறது என்று.












Click it and Unblock the Notifications