ஒரு கட்சியையும் விட்டு வைக்காத நமக்கே அதிமுக தலைகள் தண்ணி காட்டுறாங்களே... ஏமாந்து போன பங்காளி கட்சி
சென்னை: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நினைத்த நேரத்தில் கட்சி தாவல்களை அசால்ட்டு செய்கிற நமக்கே அதிமுக தலைகள் ரொம்பவே தண்ணிகாட்டுறாங்களே என ஏமாற்றத்தில் இருக்கிறதாம் கூட்டணி கட்சி.
நாடு விடுதலை அடைந்தது முதல் விரும்பாத அரசுகளைக் கலைக்க அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை டெல்லி பயன்படுத்தி வந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இதற்கு கடிவாளம் போட்டது. இதனால் அவ்வளவு எளிதாக 356-வது பிரிவை டெல்லி பயன்படுத்த முடியாது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக புதிய புதிய வியூகங்களுடன் அரசியலில் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அதாவது ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்களை கொத்தாக ராஜினாமா செய்ய வைப்பது; இதன் மூலம் அரசின் பெரும்பான்மையை கேள்விக்குள்ளாக்குவது; மாநிலம் மாநிலமாக அதிருப்தி எம்.எல்.ஏக்களை அழைத்து போய் ரிசார்ட்டில் தங்க வைப்பது என நீள்கிறது இந்த அரசியல்.
அதிமுக ஆட்சியில் நடந்த திட்ட முறைகேடுகள்.. விசாரணையை தொடங்கும் திமுக அரசு.. அமைச்சர் அதிரடி பேட்டி
கூவத்தூர் ரிசார்ட் அரசியல்
தமிழகத்திலும் கூட அதிமுகவின் கூவத்தூர் ரிசார்ட் அரசியல் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இந்த நிலையில் சட்டசபையில் அதிமுகவுடன் அந்த கட்சி கூட்டணி அமைத்தது. அதிமுக தலைவர்கள் விரும்பாவிட்டாலும் கூட வேற வழியே இல்லாமல்தான் கூட்டணி அமைத்தாக வேண்டிய சூழ்நிலை வந்தது.
அதிமுகவுக்கு எச்சரிக்கை மணி
அப்போதே அரசியல் பார்வையாளர்கள் பலரும் அதிமுகவுக்கு எச்சரிக்கை மணி அடித்தனர். இனிமேல் அதிமுக தலைகளை அப்படியே தங்கள் கட்சிக்கு இழுத்து அந்த கட்சியையே இல்லாது ஒழித்துவிடும் என்றும் கணிக்கப்பட்டது. இந்த கணிப்பும் பொய்யாகவில்லை. புதுச்சேரியில் அதிமுகவின் இடத்துக்கு அந்த கட்சியும் வந்துவிட்டது.
கட்சி மாற தூது
புதுச்சேரி கெத்துடன் தமிழகத்தில் அதிமுக தலைவர்கள் பலருக்கும் தூது விட்டுப் பார்த்து கொண்டே இருந்தது அந்த கூட்டணி கட்சி. ஆனால் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு போவதைத்தான் அதிருப்தியாளர்கள் விரும்புகிறார்களே தவிர கூட்டணி கட்சி பக்கம் திரும்பிக் கூட பார்க்க மறுக்கிறார்கள்.
அதிமுக சீனியர்கள் நிராகரிப்பு
ஏனெனில் திமுகவில் இருந்து பெரும் பரபரப்புடன் கட்சி தாவி போனவர்கள் கைவிடப்பட்டவர்களாக, கண்டு கொள்ளப்படாதவர்களாக இருக்கிறார்கள். அப்படி அரசியலில் நடுத்தெருவில் நிற்பதற்கு பதிலாக அதிமுக கரை வேட்டியுடன் தெம்பாகவே வீம்புக்கேனும் வலம் வரலாம் என்பதுதான் அப்படி தூண்டில் வீசப்பட்டவர்களின் கருத்தாக இருக்கிறது.
ஏமாந்த கூட்டணி கட்சி
அதனால் கூட்டணி கட்சியில் இருந்து போன் கால்கள் வந்தாலே தவிர்க்கிறார்கள்; அப்படியே பேச நேர்ந்தாலும் இப்ப வேண்டாம்; நல்ல சந்தர்ப்பம் வரட்டுமே என ஆசைகாட்டிவிட்டு எஸ்கேப்பாகிவிடுகிறார்கள். அதனால் மிகப் பெரிய ஏமாற்றத்துடன் இருக்கிறதாம் கூட்டணி கட்சி. அதாவது தமிழகத்தில் தங்களது செப்படி வித்தையில் ஒருத்தரும் சிக்கலையே என்கிற ஆதங்கமாம் அது.