எச்.ராஜாவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! மேல்முறையீடு செய்ய வசதியாக நீதிமன்றம் ஆர்டர்
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் அவர் குற்றவாளி என இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இரு வழக்குகளிலும் தலா 6 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எச் ராஜா மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பாஜக தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்து வருகிறார் எச். ராஜா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும், மக்களவை எம்.பியும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்திருந்தார்.

பல்வேறு காவல்நிலையங்களில் திமுக நிர்வாகிகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது. கனிமொழி மீதான அவதூறு விமர்சனம் தொடர்பாக ஈரோடு நகர காவல்துறையும் பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்து தொடர்பாக ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையும் எச். ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.
பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அச்சமயத்தில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்தார் நீதிபதி ஜெயவேல். அதில் 41 பக்க தீர்ப்பில் ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என தீர்மானிப்பதாகவும், இரு பதிவுகளும் ராஜா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது அவ்வாறு எச்.ராஜா அனுப்பவில்லை என்பதற்கு எந்த ஆதாரங்களும் குற்றவாளி தரப்பில் இருந்து தாக்கல் செய்யவில்லை. எனவே எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
மேலும் இரண்டு வழக்குகளிலும் எச்.ராஜாவுக்கு தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கினார் நீதிபதி ஜெயவேல். இதனால், எச்.ராஜா உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டும் என்பதால், இந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இதனால் கால அவகாசம் வேண்டும் என்றும் எச் ராஜா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இந்த தண்டனையை நிறுத்தி வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எச்.ராஜா மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறப்பு நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications