"எங்க போனீங்க.. டீ குடிக்க போனேன்.. " சென்னை கொரோனா வார்டில் காணாமல் போன முதியவரின் சாவகாச பதில்!
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை காணவில்லை என திகைத்த நிலையில் டீ குடிக்க சென்றதாக சாவகாசமாக சொன்னது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் 4500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உறுதியானவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்று நோய் என்பதால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெறுபவர்கள், குணம் அடைந்தவர்கள் விவரம்
கொரோனா வார்டு
இந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவர் காணாமல் போய்விட்டார். பள்ளிக்கரணையை சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த 29ஆம் தேதி முதல் இந்த மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நள்ளிரவு
இந்த நிலையில் நேர்று நள்ளிரவில் திடீரென கொரோனா வார்டிலிருந்து அந்த முதியவர் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீஸார் நள்ளிரவு முழுவதும் தேடினர்.
அதிர்ச்சி
பின்னர் அதிகாலையில் அந்த முதியவரே வார்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரிடம் எங்கே போனீர்கள் என போலீஸார் கேட்டனர். அதற்கு அவர் டீ குடிக்கபோனேன், கடை ஏதுமில்லை. சரி வேறு ஒரு வார்டில் எனது நண்பர் உள்ளார். அவரை பார்க்கலாம் என சென்றேன். அவரை பார்க்க முடியவில்லை என கேஸுவலாக சொன்னது போலீஸாரையே அதிர்ச்சி அடைய செய்தது.
உயிர் போகும் நிலை
கொரோனாவால் ஆங்காங்கே உயிர் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொற்று நோய் என தெரிந்தும் ஏதோ சுற்றுலாவுக்கு வந்தது போல் அந்த முதியவர் டீ குடிக்க சென்றுள்ளார். இது அந்த மருத்துவமனையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே அங்கு பாதுகாப்பை அதிகரிக்காவிட்டால் நோய் மேலும் பரவும் அவலம் அதிகரிக்கும் என கோரிக்கை விடப்படுகிறது.