வாழ்த்து மழை.. ஸ்டாலின் இல்லத்தில் குவியும் முக்கியப் பிரமுகர்கள். போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!
சென்னை: முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக முக்கிய ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவரது இல்லத்தில் குவிந்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் தனிப்பெரும்பானையுடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கையில் திமுக வெற்றிமுகத்தில் உள்ளது.

திமுக வேட்பாளர்களின் வெற்றி வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டதால் ஸ்டாலினை சந்திப்பதற்காக முக்கிய ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகை புரிந்துள்ளனர்.
தமிழக டிஜிபி திரிபாதி பூங்கொத்துடன் ஸ்டாலினின் இல்லத்துக்கு சென்றிருக்கிறார். வந்தவர்கள் அனைவரையும் கனிவுடன் உபசரித்து வரவேற்பரையில் அமரவைத்த ஸ்டாலின் அலுவலக ஊழியர்கள், யார் யார் வந்திருக்கிறார்கள் என்ற விவரத்தை ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முக்கிய தொழிலதிபர்கள்,சினிமா பிரமுகர்கள், என வி.ஐ.பி.க்கள் பலரும் இன்று நண்பகல் முதலே ஸ்டாலின் இல்லத்தை நோக்கி படையெடுத்து வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஸ்டாலின் சந்தித்தாரா என்ற விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் குடும்ப உறவினர்களும் மற்றும் நெருங்கிய நண்பர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறுவதற்காக அவரது இல்லத்துக்கு வந்துள்ளனர். நேற்று வரை பத்தோடு பதினொன்றாக காட்சியளித்த ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை இன்று முதல் முதலமைச்சர் வசிக்கும் தெரு என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது.

திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், என பலதரப்பட்டோரும் இனி அடுத்தடுத்து இன்றும், நாளையும் அங்கே குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications