தமிழக வீரருக்கு லாகூரில் என்ன நடந்தது! ஜெய் ஸ்ரீராம் கோஷம்! சிவராமகிருஷ்ணனுக்கு பத்திரிகையாளர் பதில்
சென்னை: உலகக் கோப்பை தொடரில் எழுந்த ஜெய் ஸ்ரீராம் கோஷம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடர் இப்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதின. இதில் அபாரமாக ஆடிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், புள்ளப் பட்டியலிலும் முதல் இடத்திற்குச் சென்றது.

இந்தப் போட்டியைக் காண வந்தோர் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி கோஷங்களை எழுப்பியது சர்ச்சையானது. முதலில் டாஸ் வென்று பாபர் ஆசம் பேசத் தொடங்கிய போது. அவரை பேசவே விடாமல் கோஷமிட்டனர்.
கருத்து மோதல்: மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பாபர் ஆஸம், ரிஸ்வான் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வரும் நிலையில், இதில் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது ட்விட்டரில், "காலையில் எங்கள் பூங்காவில், ஒருவருக்கொருவர் அன்பாக வணங்க 'ராம் ராம்' என்று சொல்வோம். அப்படியிருக்கும் போது பாகிஸ்தான் வீரர்களைக் கேலி செய்ய ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை ஏன் ஆக்ரோஷமான கோஷமாகப் பயன்படுத்த வேண்டும்? ராமர் நமக்கு ஞானத்தைக் கொண்டு வர வேண்டும், பகையைத் தூண்டக்கூடாது. நான் சொல்வது சரிதானே?" எனப் பதிவிட்டிருந்தார்.
லட்சுமண் சிவராமகிருஷ்ணன்: ராஜ்தீப் சர்தேசாயின் இந்தக் கருத்துக்கு நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளைத் தெரிவித்தனர். அதில் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் கூறிய கருத்துகள் பலரையும் கவனிக்க வைத்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன், இப்போது பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் துணைத் தலைவராக இருக்கிறார்.
அவர் தனது ட்விட்டரில், "பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்ற போது 16 வயதில் நான் எப்படித் துன்புறுத்தப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என் நிறத்தில் இருந்து என் மதம், என் நாடு மற்றும் என் கலாச்சாரம் என அனைத்திற்கும் என்னை அவமதித்தனர். இதையெல்லாம் நீங்கள் அனுபவித்தது இல்லை என்றால் தயவு செய்து இது குறித்துப் பேச வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
பதில்: இதற்கிடையே லட்சுமண் சிவராமகிருஷ்ணனின் இந்தக் கருத்துக்கு ராஜ்தீப் சர்தேசாய் பதிலளித்துள்ளார். அதில் அவர், "விளையாட்டு என்பது நம்மில் இருக்கும் சிறந்த விஷயங்களை வெளி கொண்டு வர வேண்டும்.. மோசமானதை இல்லை. பாகிஸ்தான் மக்கள் நமது வீரர்களைக் கிண்டல் செய்து அவமதித்து இருக்கலாம். ஆனால் அதே மக்கள் நமது கிரிக்கெட் வீரர்களையும் கொண்டாடியிருக்கிறார்கள். கடந்த 2004இல் லாகூரில் மொத்த மைதானமும் தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜிக்காக கோஷமிட்டார்கள். அப்போது நான் அங்கே இருந்தேன்.
இந்தியாவிலும் பாகிஸ்தான் வீரர்களைப் பாராட்டி இருக்கிறோம்.. உங்கள் சொந்த ஊரான சென்னையில்.. 1999இல் மறக்கமுடியாத டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணிக்குச் சென்னை மக்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.. நான் எப்போதும் சொல்வது ஒன்றுதான்.. அரசியல், மதம் ஆகியவை கட்டி எழுப்பும் வெறுப்பின் சுவர்களை உடைக்கும் ஒரே விஷயம் விளையாட்டு தான்.. அன்பு இல்லாமல் எப்படி ஒரு வாழ்க்கை இருக்க முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications