சீனியருக்கு மரியாதை.. சட்டசபை தலைவரானார் ஜேசிடி பிரபாகர்! செங்கோட்டையனுக்கு புதிய பொறுப்பு!
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புதிய பேரவைத் தலைவராக தவெக எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளார் தற்காலிக சபாநாயகர் கருப்பையா. அதேபோல், துணைச் சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

இதையடுத்து, தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் பணிக்காக தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமிக்கப்பட்டிருந்தார்.
தவெக அரசு
இந்த நிலையில் நிரந்தர பேரவைத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர், பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். அதேபோல், துணைத் தலைவர் பதவிக்காக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிசங்கர் மனுத்தாக்கல் செய்தார்.
சட்டசபை தலைவர்
வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பின்னரும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. இதனால், ஜேசிடி பிரபாகரும் ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூடிய போது, தற்காலிக சபாநாயகர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஜேசிடி பிரபாகர்
இதன்பிறகு, புதிய பேரவைத் தலைவரை அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். பின்னர், அனைத்து கட்சித் தலைவர்களும் புதிய பேரவைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.
செங்கோட்டையன்
இதற்கிடையே, சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் செங்கோட்டையன், அரசு கொறடாவாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பொறுப்பேற்றனர். ஆட்சியை அமைத்த பிறகு சட்டப்பேரவையிலும் தவெக தனது தனிப்பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக இந்த நியமனங்கள் பார்க்கப்படுகின்றன.
விஜய் அரசு
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு தற்போது சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு முன்பாக சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் தேர்வு அமைதியாக முடிவடைந்திருப்பது, தவெக தரப்புக்கு முக்கியமான அரசியல் பலமாக கருதப்படுகிறது. புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதிமுக மோதல்
குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக தரப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புகளுக்கிடையில் நடைபெறும் இந்த கூட்டம் தமிழக அரசியலில் முக்கியமான தருணமாக மாறியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக தரப்பில் சட்டசபை குழு தலைவர் விவகாரம் தொடர்பாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி - சிவி சண்முகம் இருதரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், யாருக்கு அங்கீகாரம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications