ஜெயங்கொண்டம்: கே.பாலு போட்டியிட்ட எதிர்ப்பு- பா.ம.க. மூத்த தலைவர் வைத்தி கட்சியில் இருந்து விலகல்
சென்னை: ஜெயங்கொண்டம் தொகுதியில் வழக்கறிஞர் பாலுவை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதாக முன்னாள் துணை பொதுச்செயலாளர் வைத்தி அறிவித்துள்ளார்.
பாமகவிலும் வன்னியர் சங்கத்திலும் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் வைத்தி. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வலதுகரமாக திகழ்ந்தவர் வைத்தி.

பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர். டாக்டர் ராமதாஸ் ஆணையிட்டால் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் நடமாடவே முடியாது என எச்சரிக்கை விடுத்தவர் வைத்தி. காடுவெட்டி குரு மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தினருடனான பாமக மோதல்களில் அதிகம் அடிபட்டவர் வைத்தி.
சில மாதங்களுக்கு முன்னர் பாமக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வைத்தி நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பா.ம.க. வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. ஜெயங்கொண்டம் தொகுதியில் வழக்கறிஞர் பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாம் வன்னியர் சங்கம், பாமகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் வைத்தி.

இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், உழைப்புக்கு மதிப்பில்லை, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு. இன்று முதல் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தும், வன்னியர் சங்க மாநில செயலாளர் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்!! இதுவரை ஆதரவு தந்த பா.ம.க-வன்னியர் சங்க சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் வைத்தி.












Click it and Unblock the Notifications