டச் பண்ண முடியாது.. இதுதான் மற்ற கட்சிக்கும் விஜய் கட்சிக்கும் உள்ள வித்தியாசம்.. என்ன நடக்கிறது?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு தேதியை ஒரு வழியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய், அக்டோபர் மாதத்தில் 27ஆம் தேதி மாநாடு நடக்க இருக்கும் நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக கட்சியில் இருக்கும் 'முக்கிய நிர்வாகி' ஒருவர், மற்ற மாவட்ட நிர்வாகிகள் விஜய்யுடன் தொடர்பே இல்லாத வகையில் பார்த்துக் கொள்வதாகவும், தன்னிடம் தான் எதுவாக இருந்தாலும் தெரிவிக்க வேண்டும் என கூறுவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
பரபரப்புகளுக்கும் வெறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது விஜயின் அரசியல் பயணம். தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வசூல் நாயகனாக இருக்கும் அவர் அடுத்த படத்துக்கு கிட்டத்தட்ட 275 கோடி ரூபாயை ஊதியமாக பெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை, வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு செல்வதாக விஜய் கூறியது பலரது புருவத்தையும் உயர வைத்தது. அதே நேரத்தில் இதுவே அவருக்கு மிகப் பெரிய ஆதரவையும் பெற்றுக் கொடுத்தது என்றும் கூறலாம்..
மற்ற நடிகர்கள் போல அரசியலுக்கு வருகிறேன் என சொல்லிக் கொண்டே இருக்காமல், சொன்னது போல அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கிறார் விஜய். கடந்த பிப்ரவரி மாதமே தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து கொடியை அறிமுகப்படுத்தினார்.
இது பல சர்ச்சைகளை கொண்டு வந்து சேர்த்தது. இந்த நிலையில் விஜயின் முதல் மாநாடு எங்கே நடக்கும்? என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. சேலம், மதுரை, திருச்சி என பல இடங்களில் இடம் பார்த்து ஒத்து வராத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த இடம் 10க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலையில் பலரிடம் கலந்து பேசி மாநாடு நடத்த அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து காவல்துறையினரின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு மாநாடு நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கு இடம் பார்ப்பது தொடங்கி காவல்துறையிடம் அனுமதி கேட்டது, பதில் அளித்தது என எதற்குமே விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவில்லை என்றும், கட்சியின் தலைமை பதவியில் இருக்கும் ஒரு நிர்வாகி முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கட்சியை வைத்திருக்க வேண்டும் என நினைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக ஒரு சில நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது,"விழுப்புரம் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான் இருக்கிறது. விஜய்க்கு அடுத்தபடியாக தான் தான் இருக்க வேண்டும் என நினைக்கும் நிர்வாகி ஒருவர் விஜயை நெருங்க விடுவதில்லை. ஏன் அவரது பெற்றோரை கூட சந்திக்க விடுவதில்லை. பிறகு நாங்கள் எம்மாத்திரம். மாநாடு நடப்பதாக இருந்தாலும் அனுமதி கேட்பதாக இருந்தாலும், காவல்துறையை சந்திப்பதாக இருந்தாலும் எங்களிடம் எதுவுமே கேட்பதில்லை.
நாளைக்கு விழுப்புரம்.. வருகிறோம் தயாராக இருங்கள் என்று மட்டும் தான் சொல்வார்கள். எதற்காக வருகிறோம், எங்கே செல்கிறோம் என்பது கூட தெரியாது. இதுவரை நிர்வாகிகளாக இருந்த நாங்கள் ஒருநாள் கூட தலைவரை நேரில் சந்தித்தது கிடையாது. முக்கிய பிரமுகர் ஒருவர் எங்களை அறிமுகப்படுத்துவார். நாங்கள் வணக்கம் வைப்போம் அவ்வளவே. மற்ற நேரங்களில் அந்த நிர்வாகி தான் எங்களுக்கு தொடர்பு கொண்டு அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என கட்டளையிடுகிறார்.
கட்சியின் தலைவர் விஜயா அல்லது இவரா என்று கூட எங்களுக்கு பல நேரங்களில் சந்தேகம் வந்திருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கிறது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், மூன்றாம் கட்ட தலைவர்கள் என யாரையுமே தெரியவில்லை. விஜய்க்கு அடுத்து ஒருவர் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார். இதனால் பல குழப்பங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே ஒரு நடிகர் தொடங்கிய கட்சி அவரது முகத்தை தவிர கட்சியில் வேறு யாரையும் தெரியாது. இதனால் தற்போது அந்தக் கட்சி காமெடி கட்சியாக இருக்கிறது. எனவே மாநில அளவில் கூடுதல் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை தர வேண்டும். பொது வழியில் மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்கின்றனர். விழுப்புரம் மாநாடு பல சிக்கல்களை கடந்து தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த ஊரின் முக்கிய நிர்வாகிகளே அதிருப்தியில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications