சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் திடீர் மாற்றம்! செந்தாமரை கண்ணன் நியமனம்.. பரபர பின்னணி
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே வானிலை ஆய்வு மைய இயக்குநராக பணியாற்றிய புவியரசன் திடீரென மற்றப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
வெயில் காலம், மழை, வெள்ளம் மற்றும் புயல் போன்ற காலங்களில் வானிலையை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு அலர்ட் செய்யும் முக்கியமான பணியை சென்னை வானிலை ஆய்வு மையம் செய்து வருகிறது. பெருமழை போன்ற காலங்களில் வானிலை ஆய்வு மையம் சொல்வதுதான் மக்களுக்கு வேத வாக்கு.

செந்தாமரை கண்ணன் நியமனம்
இப்படி முக்கிய பணியை செய்து வரும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக புவியரசன் இருந்து வந்தார். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்ட்டுள்ளார். ஏற்கனவே இயக்குனராக இருந்த புவியரசன், செந்தாமரை கண்ணன் வகித்த காலநிலை மாற்ற மைய சென்னை இயக்குனர் பதவிக்கு மறப்பட்டுள்ளார்.

புவியரசன் திடீர் மாற்றம் ஏன்?
புவியரசன் திடீர் மறப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சென்னையில் யாரும் எதிர்பாராதவிதமாக பேய் மழை கொட்டி தீர்த்தது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதந்தன. அன்று இரவும் மட்டும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதாவது மேக வெடிப்பு போன்று பெய்த மழையால் சென்னையே மொத்தமாக முடங்கியது.

அன்று அளித்த பேட்டிதான் காரணமா?
வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே இதுதொடர்பாக ஏதும் எச்சரிக்கை விடுக்காத நிலையில் திடீரென கொட்டிய பேய் மழையால் சென்னைவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் திடீர் பேய் மழை கொட்டி தீர்த்தது ஏன்? என்று அப்போது சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ''அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை. இது தொடர்பாக முன்கூட்டியே கணிக்க தவறி விட்டோம்'' என்று புவியரசன் கூலாக பதில் சொன்னார்.

முதல்வர் ஸ்டாலின் காதுகளுக்கு எட்டியது
மேலும், ''பெரும் மழை, புயலை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கும் அளவுக்கு நவீன கருவிகள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இல்லை'' என்று புவியரசன் சர்வசாதாரணமாக கூறியபோது ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். புவியரசனின் இந்த கருத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காதுகளுக்கு எட்டியது. புவியரசன் கூறிய கருத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உள்துறை அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார்.

அமித்ஷாவுக்கு கடிதம்
கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணிக்க தவறியதால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சார்ந்திருக்கின்றது. பெருமழை புயல் போன்ற "ரெட் அலர்ட்" சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுகொள்வதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறி இருந்தார்.

17 நாட்களுக்குள் மாற்றம்
இந்த சம்பவங்கள் நடந்த 17 நாட்களுக்குள் தற்போது புவியரசன் இயக்குனர் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். வானிலை மைய கருவிகள் சரியில்லை என்று புகார் தெரிவித்து இருந்ததால்தான் புவியரசன் மாறப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications