செந்தில் பாலாஜியை கைது செய்தது முதல்வருக்கு வைத்த செக்? திமுக கூட்டணி கட்சியினர் சொல்வதென்ன?
சென்னை: செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தி அவரை கைது செய்ததன் மூலம் மத்திய பாஜக அரசு முதல்வர் ஸ்டாலினுக்கு செக் வைக்க முயற்சி செய்வதாக திமுக கூட்டணி கட்சியினர் கூறியுள்ளனர். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் செந்தில் பாலாஜியை கைது செய்து தமிழக அரசை மத்திய அரசு மிரட்டுவதாக திருமாவளவன், முத்தரசன், கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். .சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் சோதனை நிறைவடைந்த நிலையில், அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
காருக்குள் படுத்திருந்த செந்தில் பாலாஜி, நெஞ்சுவலியால் துடித்தார். கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு,மா.சுப்பிரமணியம், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தனர். செந்தில் பாலாஜி சுயநினைவின்றி இருப்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். நள்ளிரவில் அமைச்சரை விசாரணைக்கு அழைத்து செல்வது மிகப்பெரிய குற்றம். பாஜகவுக்கு எதிராக முதலமைச்சர் இருப்பதால் திமுக அரசி பலவீனப்படுத்தவும், ஆட்சியை சீர்குலைக்க முயற்சி செய்வதாகவும் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது. எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாட்டிலும் பழிவாங்கும் படலத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது எனவும் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
செந்தில் பாலாஜியின் கைது குறித்து கருத்து கூறியுள்ள திருமாவளவன், பாஜக அல்லாத மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டி பணிய வைக்கப்பார்ப்பதாக குற்றம் சாட்டினார். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இப்போது சோதனை நடத்தி கைது செய்துள்ளனர். அமித்ஷா வந்து சென்ற மறுநாள் கைது செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய திருமாவளவன், இது முதல்வர் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட செக் போலவே கருத வேண்டியுள்ளது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதனிடையே செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது. இதய துடிப்பில் மாற்றம் இருந்தது. ECG யில் சில மாறுதல்கள் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு வராமல் இருக்க ICUவில் அனுமதிக்கப்பட்டார்.மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதய செயல்பாடு இயல்பான நிலைக்கு திரும்பும் வரை ஓரிரு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பு தேவை. இரண்டு, மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications