செந்தில் பாலாஜிக்கு விடிவுகாலம்! ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு.. ட்விஸ்ட்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு முன்னதாக நீதிபதி எம்.சுந்தர் தலைமையிலான அமர்வு தெரிவித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி ஜாமீன்: இந்த நிலையில் புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய நிலையில், அந்த வழக்கை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன்பின் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றமும் இதை விசாரிக்க மறுத்து விட்டது.
மேலும், ஜாமீன் மனுவை தாம் விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறும் சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.
வழக்கு விசாரணை: அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டு எப்படி ஏற்பது ? என நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, மாற்று அமர்வும் இன்று இல்லை என்பதால் தான் தங்களிடம் முறையிடுவதாகவும் நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது என தெரிவித்தார்.
எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என நீதிபதி எம்.சுந்தர் கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் விலகியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் முறையிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு. அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜாமீன் மனுவையும் விரைந்து முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications