செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை வாதிடும் அமலாக்கத்துறை.. விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட்!
சென்னை: அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்க, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி, கைது செய்தனர்.

அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் 19ஆவது முறையாக பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எட்டுமாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாகக் குணமடையாத சூழலில், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது' எனக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பரிசீலனைக்காக செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை அவர் தரப்பில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,"செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும்" என்று தெரிவித்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பினர் ஜாமின் மனுவை திரும்ப பெற்றனர்.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் போது, அமலாக்கத் துறை தரப்பில் வாதிடும் போது கடந்த 2016-17-ம் ஆண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. செந்தில் பாலாஜியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் யார், யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், முகவரிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் உள்ளன.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்படுகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்கு முன்பு ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போது, அவர் அமைச்சராக நீடிப்பதால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, இந்த வழக்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடைநிலை ஊழியர் ஒருவர் குற்றவழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால் குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 243 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி திங்கட்கிழமையன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகாவது ஜாமின் கிடைக்குமா? சிறை வாசம் முடிவுக்கு வருமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. இதனிடையே இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்தது.
அதில், "நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி வருகிறார். வழக்கின் விசாரணையை துவங்க அமலாக்கத் துறை தயாராக இருக்கிறது. செல்வாக்கான அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும்.
ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. இதனால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைடைந்ததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications