கேஸ் மொத்தத்தையும் முடிங்க..சுப்ரீம்கோர்ட் விதித்த காலக்கெடு இன்றோடு நிறைவு.."லாக்" செந்தில் பாலாஜி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் அறிவித்திருந்த நிலையில், அதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். பிறகு காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
புழல் சிறை: பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்தனர். பிறகு மறுபடியும் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 2 மாதங்களாகும் நிலையில், அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணை வழக்கு, எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும்கூட, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி: அந்தவகையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுடன் அந்த காவலும் முடிவடைந்துவிட்டது.. பிறகு, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை மறுபடியும் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 7-வது முறையாகும்.
இதனிடையே, இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் கூறியிருந்தது. இதனிடையே, வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரி குற்றப்பிரிவு போலீசார் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கால அவகாசம் வழங்க மனுதாரர்கள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
தமிழக டிஜிபி: அதேபோல், 6 மாத அவகாசம் கோரியதற்கு கடுமையான அதிருப்தி தெரிவித்த சுப்ரீம்கோர்ட், இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது. இதற்கு பிறகு, இது தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அரை மணி நேரம் அவகாசம் வழங்கியது சுப்ரீம்கோர்ட்.. இதைத்தொடர்ந்து ஒட்டு மொத்த விசாரணையையும், 2 மாதங்களுக்குள் நாங்கள் நடத்தி முடிக்கிறோம் என்று தமிழக அரசு தரப்பில் உறுதி தரப்பட்டது..
இன்றே கடைசிநாள்: ஆனால், இதையும் ஏற்க மறுத்த சுப்ரீம்கோர்ட், செப்டம்பர் 30ம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது..
ஒருவேளை, இது தவறும் பட்சத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில், இன்றுடன் காலஅவகாசம் முடிகிறது.. கெடு முடிவடையும்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் இனி அடுத்து என்ன நடக்கும் என்பதில் முக்கிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications