செந்தில் பாலாஜி வழக்கில்.. இருவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! என்ன காரணம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பறிமாற்றம் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையுடன், சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் உத்தரவாத தொகை விவகாரத்திலும் முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.
தமிழக மின்சார துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இப்போது திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள செந்தில் பாலாஜி, முன்பு அதிமுகவில் இருந்தவர். குறிப்பாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

செந்தில் பாலாஜி
இருப்பினும், அப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணமோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை தனித்தனியாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ரெய்டை தொடர்ந்து கடந்த 2023ல் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டார். ஓராண்டு சிறைக்கு பிறகே அவர் வெளியே வந்தார்.
அதேநேரம் இந்த வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு நேற்றைய தினம் சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.
நேரில் ஆஜர்
இந்த வழக்கை பொறுத்தவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், உள்ளிட்ட 13 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விசாரணையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜாராகிருந்தனர்.
நீதிமன்றம் உத்தரவு
முன்பு நடந்த விசாரிணையின் போதே இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால், அவர்கள் ஜாமீன் உத்தரவாத தொகை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஜெயராஜ் குமார், பழனி ஆகியோர் நீதிமன்றம் குறிப்பிட்ட ரூ.2 லட்சம் உத்தரவாதம் செலுத்தவில்லை.. இதனால் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், குற்றப்பத்திரிகையுடன், சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications