விமானத்தில் அவசர கால கதவு திறக்கப்பட்ட விவகாரம்.. அண்ணாமலை சொல்வது பச்சை பொய்.. செந்தில் பாலாஜி
சென்னை: விமானத்தில் அவசர கால கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பச்சை பொய் சொல்லி வருவதாக தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளர்கள் கவுதம சிகாமணி மற்றும் எஸ் ஆர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று நிர்வாகிகளை நேர்காணல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக அறிவிக்கிற வேட்பாளர்கள் வெற்றி பெற்று டெல்லி செல்வர். அங்கு தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பர்.
பொய்.. அது எப்படிங்க கை பட்டு எமர்ஜென்சி கதவு திறக்கும்? அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி பளீர் அட்டாக்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்து எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் என பொறுத்திருந்து பாருங்கள். திமுக கூட்டணி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். முதல்வர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
புதிய மின்சார சட்டத் திருத்த மசோதா
புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவால் இனி மாதந்தோறும் மின் கட்டணம் மாறும் என செய்திகள் சில நாட்களாக வருகிறது அது முற்றிலும் தவறான செய்தி. நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது. தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது.
மின் துறை
மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை தமிழ்நாடு முதல்வர் ஒரு போதும் ஏற்க மாட்டார். விமானத்தில் அவசர கால கதவு திறக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்கிறீர்கள். ஒரு கட்சியின் தலைவராக இருக்கக் கூடியவர் பொய்யான செய்தி வெளியிடுவதை அனைவரும் உற்று நோக்க வேண்டும்.
அவசர கால கதவு
விமானத்தில் அவசர கால கதவை திறக்கவில்லை என பொய் சொல்லும் அண்ணாமலை, அதே போல் அரை மணி நேரம் தான் விமானம் காலதாமதமானதாக பச்சை பொய்யை சொல்கிறார். இந்த சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இதில் அண்ணாமலை ஏன் பொய் சொல்ல வேண்டும்.
கை கடிகாரம்
அது போல் கை கடிகாரத்திற்கான பில் அவரிடம் இருந்தால் எடுத்து கொடுக்க வேண்டியதுதானே? ஏப்ரல் மாதம் தருவதாக கூறும் அண்ணாமலை அதற்கான பில் ஒன்றை தயார் செய்ய அவ்வளவு காலம் ஆகும் போல தெரிகிறது. தமிழகத்தில் பாஜக உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளனர் என அண்ணாமலை சொல்ல வேண்டும். நோட்டாவோடு போட்டி போட் கூடியவர்கள் தமிழ்நாடு பாஜகவினர் என்றும் செந்தில் பாலாஜி விமர்சித்தார்.