கொந்தளித்த காங்கிரஸ்.. முடிவை மாற்றிய செந்தில் பாலாஜி.. கிறுகிறுக்கும் கரூர் பாலிடிக்ஸ்
சென்னை: கரூர் நகரக் காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் கவிதா திமுகவில் இணைந்ததும் அது தொடர்பாக செந்தில் பாலாஜி போட்ட போஸ்டு இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியினர் பலரும் இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அவர் தனது முடிவை மாற்றியிருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்றாலும் இப்போதே தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாம். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே எல்லாக் கட்சிகளும் நடவடிக்கைகளை எடுக்கின்றன. இதனால் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் கூட கட்சிகளை மாறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

சர்ச்சை
அப்படித் தான் சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் நகரக் காங்கிரஸ் மகளிர் அணித் தலைவராக இருந்த கவிதா, திமுகவில் இணைந்தார். திமுக கரூர் மாவட்டச் செயலாளரும் மாஜி அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் கவிதா திமுகவில் இணைந்தார். தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது காங்கிரஸ் நிர்வாகி ஒருவரை திமுகவில் இணைத்து சர்ச்சையானது.
குறிப்பாக செந்தில் பாலாஜி இது தொடர்பான படத்தையும் பகிர்ந்திருந்தார். அதுவே விவாதத்தைக் கிளப்பப் பிரதானக் காரணமாக இருந்தது. அதாவது தமிழ்நாடு தலைநிமிர, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து கவிதா திமுகவில் இணைந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருந்தது.
ஜோதிமணி விமர்சனம்
காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை விமர்சித்தனர். குறிப்பாக கரூர் எம்பி ஜோதிமணி இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாகவே சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது. இம்மாதிரியான அவமரியாதையை எளிதில் கடந்து போய்விட முடியாது.கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று விமர்சித்திருந்தார்
முடிவை மாற்றினார் செந்தில் பாலாஜி
இதற்கிடையே இந்த விஷயத்தில் செந்தில் பாலாஜி தனது முடிவை மாற்றியுள்ளார். கவிதா திமுகவில் இணைந்தது தொடர்பாகப் பதிவிட்டிருந்த போஸ்ட்டை செந்தில் பாலாஜி நீக்கிவிட்டார். இப்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பான போஸ்ட் எதுவும் இல்லை.
கருத்து முரண்
திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கடந்த பல ஆண்டுகளாகவே கூட்டணியில் இணைந்து பயணித்து வருகிறது. அதேநேரம் இப்போது சில மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே சில கருத்து முரண்களைப் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூட்டணி ஆட்சி தேவை என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டணி ஆட்சி என்பது குறித்து திமுக எதுவும் கூறாத நிலையில், சில காங்கிரஸ் நிர்வாகிகள் இது தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications