ஜெயிலில் செந்தில் பாலாஜி.. ஈடி ஆபிசில் பொன்முடி.. ஒரே நாளில் 2 சம்பவம்.. திமுகவில் உச்சகட்ட பரபரப்பு
சென்னை: ஒருபக்கம் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மறுபக்கம் இன்று காலை முதல் நடந்த சோதனைக்கு பின்னர் அமலாக்கத்துறையால் விசாரணைக்க அழைத்து செல்லப்பட்டுள்ளார் அமைச்சர் பொன்முடி. சென்னையில் இன்று ஒரே நாளில் இப்படி இரண்டு சம்பவம் நடந்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஓமந்தூரார் காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜி அங்கிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இன்று அடைக்கப்பட்டார். நீதிமன்றக் காவல் வரும் ஜூலை 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், சென்னை புழல் சிறையில் வரும் 26ம் தேதி வரை சிறையில் இருப்பார். அதன்பிறகு அவரது காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீட்டிக்கப்படும்.
நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளனர். செந்தில் பாலாஜியை கைது செய்தது மற்றும் நீதிமன்றக் காவல் ஆகியவை சட்டப்பூர்வமானது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை மனு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடியும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் வந்துள்ளார். இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேர சோதனைக்கு பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜிக்கு அடுத்தபடியாக பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கலாம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், இன்று சோதனை நடந்திருப்பதால் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார்.
என்ன வழக்கு- சோதனை ஏன்? : ரிசர்வ் வங்கி அனுமதி இல்லால், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளார் என்று பொன்முடி மகன் கௌதம சிகாமணி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. வெளிநாடுகளில் கௌதமசிகாமணி செய்த முதலீடுகள் மற்றும் அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் ஈட்டிய தொகைகளுக்கு ஈடாக 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டு 'பெமா' சட்டத்தின் கீழ் முடக்கி இருந்தது.அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் இந்த வழக்கில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல் 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக என்ன வழக்கு, ஏன் சோதனை என்பதை தெளிவாக விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது..
இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் பொன்முடி விசாரணைக்கு செல்லப்பட்டுள்ள நிலையில்,அந்த பக்கம் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரண்டும் சம்பவங்களும் ஒரே நாளில் அதுவும் தலைநகரில் நடந்துள்ளது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை பழிவாங்கும் செயல் என்று திமுக விமர்சித்துள்ளது. எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு சென்ற நிலையில் இந்த சம்பவங்கள் நடந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications