செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு.. நீதிபதி முன்பே அமலாக்கத் துறைக்கு சென்ற முக்கிய 9 டாக்குமெண்டுகள்
சென்னை: அறுவை சிகிச்சை செய்த போதிலிருந்தே இன்னும் உடல்நிலை முழுவதுமாக குணமாகவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார்.

அவரது நீதிமன்றக் காவல் 7 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜூன் 16ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20ம் தேதிகளில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் நேற்றும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
நேற்றைய சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில் சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது அக்டோபர் 11 ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு "இதய அறுவை சிகிச்சை செய்ததிலிருந்தே உடல்நிலை முழுவதுமாக குணமடையவில்லை. அவருக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் " என வாதம் செய்தனர்.
இதை கேட்ட நீதிபதி ஜெயசந்திரன், இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அமலாக்கத் துறையின் பதில் மனுவிற்கேற்ப செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவதா இல்லையா என்பது வரும் 16ஆம் தேதிதான் தெரியவரும். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையை சேர்ந்த 9 மருத்துவர்களின் மருத்துவ அறிக்கையையும் அமலாக்கத் துறையிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications