8வது முறையாக செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு .. வரும் அக்டோபர் 20ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், 8வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை வரும் அக்டோபர் 20ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். அவரது கைது சட்டப்படியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்ததும், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அவரது காவலை ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 28-ம் தேதி, செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த சிறைத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில்,உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்படி செந்தில் பாலாஜி காவல் ஆறு முறை நீட்டிக்கப்பட்டிருந்தது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்திருந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக கடந்த செப்டம்பர் 29ம் தேதி ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.இதையத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்திருந்த நிலையில், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியை மேலும் 7 நாட்கள் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி அக்டோபர் 20ம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவிற்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரியுள்ளது. இதையடுத்து அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம் வரும் 15ம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே 15ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போதுதான் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications