"விசாரணைக்கு ஆஜராக முடியாது".. செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறைக்கு விளக்கம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று கூறி, அதற்கு விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, அபிராமபுரத்தில் உள்ள மற்றொரு குடியிருப்பு, கரூரில் செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் வீடுகள் உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடத்தியது.
பின்னர், அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர். தற்போது செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அசோக்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி, அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பிய இருந்தது. செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் இருப்பதால், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டமிட்டிருந்தது.
இதனிடையே செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக அமலாக்கத்துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய தவறும் பட்சத்தில் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் விசாரணைக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை.
வருமான வரிகணக்கிற்கு முரண்பாடாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கணக்கில் ரூ.1.34 கோடி இருந்தது. செந்தில் பாலாஜியின் மனைவி வங்கி கணக்கில் ரூ.29.55 லட்சமும் இருந்தது. இப்பணம் செந்தில் பாலாஜி வருமான வரிகணக்கிற்கு முரண்பாடாக இருந்தது
செந்தில் பாலாஜியை ஜூன் 14 அதிகாலை 1.39 மணிக்கு தான் கைது செய்தோம்; சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கான ஆதாரமும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தராததுமே அவர் கைது செய்யப்பட்டதற்கு காரணம். அதேபோல அவரது சகோதரர் அசோக்குமார், சண்முகம் ஆகியோருக்கும் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை அதனால் தான் செந்தில் பாலாஜி மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை கூறியிருந்தது
இதனிடையே பண மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால், அது தொடர்பாக இன்று ( 20-ம் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்ததாம். அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வருமாறு அதிகாரிகள் கூறியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்த பிறகு, வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் விசாரணைக்கு ஆஜராகி, விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சம்மனுக்கு, அசோக்குமார் தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அசோக்குமார் அளித்துள்ள விளக்கத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை தயார் படுத்தவும் - இது சட்ட ரீதியான நகர்வு இருப்பதால் இந்த தேதியில் ஆஜராக முடியாது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications