எடப்பாடி ராஜ்ஜியம்! சசிகலா தொடங்கி.. செங்கோட்டையன் வரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைகள்
சென்னை: எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு அதிமுகவின் முன்னணி தலைவர்களாக இருந்த பலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். சசிகலா, டிடிவி தினகரன், கேசி பழனிசாமி தொடங்கி, ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர் ராஜா இப்போது செங்கோட்டையன் வரை இந்தப் பட்டியல் நீள்கிறது.
2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, எம்ஜிஆர் காலத்தில் எம்.பியாக இருந்து வந்த கேசி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ் - எடப்பாடி இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன், ஓபி ரவீந்திரநாத் உள்ளிட்ட 18 பேரை நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த அதிமுக மோதல் பெரும் குழப்பமாக வெடித்து நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்தன. இறுதியில், எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியது.
ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர் மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அண்மையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவர் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக எடப்பாடி - செங்கோட்டையன் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், அண்மையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடிக்கு கெடு விதித்தார் செங்கோட்டையன். இதையடுத்து அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று நடந்த பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில், ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலர் தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையனும் கலந்து கொண்டார். அவர்களுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். முன்னதாக, ஓபிஎஸ் உடன் காரில் பயணித்தார் அவருடன் திறந்த வேனிலும் ஊர்வலமாகச் சென்றார்.
நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு, 'என்னை கட்சியை விட்டு நீக்கினால் சந்தோஷம்' என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிந்திருந்தும், அவர்களுடன் சேர்ந்து கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு, அவருக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தால் அதிமுகவின் முன்னணி தலைவர்களாக இருந்த பலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். சசிகலா, டிடிவி தினகரன், கேசி பழனிசாமி தொடங்கி, ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சத்திரன், அன்வர் ராஜா இப்போது செங்கோட்டையன் வரை இந்தப் பட்டியல் நீள்கிறது.












Click it and Unblock the Notifications