600 ஸ்பெஷல் பஸ்.. சென்னையிலிருந்து சொந்த ஊர் போறீங்களா? இத படிங்க முதல்ல! வீக் எண்ட் என்ஜாய்மென்ட்!
சென்னை: வார இறுதி நாட்களில் மக்கள் சொந்த ஊர் செல்ல அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இன்றும் நாளையும் இயக்கப்படுகின்றன.
பொதுவாக வார இறுதி நாட்களில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலை மோதும். அதுவும் சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் எனில் சொல்லவே தேவையில்லை. சென்னையிலிருந்து கோவை, கும்பகோணம், திருச்சி, நெல்லை என மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் செல்ல நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக விழா நாட்களில்தான் இதுபோன்ற சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படும்.

பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல கார்த்திகை தீபம் உள்ளிட்ட சில விழாக்களுக்கும் திருவண்ணாமலை போன்ற விழா சார்ந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், புது முயற்சியாக தற்போது வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த ஊர் செல்லும் மக்கள் அலைச்சல் இல்லாமல் சென்று வரலாம்.
சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, சேலம், திண்டுக்கல், தேனி, நெல்லை, தென்காசி, கும்பகோணம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து சுமார் 300 சிறப்பு பேருந்துகளும், மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications