சென்னையில் மழைநீருடன் கழிவுநீர்! தொற்று நோய் ஏற்படும் அபாயம்! சுகாதாரத்துறை செய்ய வேண்டியது என்ன?
சென்னை: சென்னையில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் கிருமித் தொற்று வேகமாக பரவக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் காலில் அரிப்பு, உள்ளிட்ட தோல் சார்ந்த வியாதிகளும் உண்டாகலாம். இதனால் மழைநீர் வடிந்துவிட்டதே என்பதோடு சென்னை மாநகராட்சி நிர்வாகமும் அரசும் விட்டுவிடாமல் தொடர்ச்சியாக சென்னை முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். அதுவும் பெயருக்கு காய்ச்சல், சளி மாத்திரைகளை மட்டும் வைத்துக்கொண்டு நடத்தாமல் தோல் சிகிச்சை நிபுணர்களையும் இந்த முகாம்களில் பங்கேற்க வைக்க வேண்டும்.

ஏனெனில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், உணவு, பால், தண்ணீருக்காக வெளியே அலைந்து திரிந்தவர்களுக்கும் தண்ணீரில் ஊறி ஊறி காலில் உள்ள தோலில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் தான் தோல் சிகிச்சை நிபுணர்களும் மருத்துவ முகாம்களில் அவசியம் இடம்பெற வேண்டும் என்பதற்கான காரணமாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே ஃபுளூ காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.
இதில் மழைக்கால தொற்று நோய்களும் சேர்ந்து கொண்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதனால் தான் மழை நீர் வடிந்த பகுதிகளில் கிருமி நாசினிகளை தொடர்ந்து தெளிக்க வேண்டும். ஓரிரு நாட்களோடு இதனை நிறுத்திவிடாமல் குறைந்தது 10 நாட்களுக்காவது கிருமி நாசினிகளை தெளித்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மழை பெய்த போதும், வெள்ளம் சூழ்ந்த போதும் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை எந்தளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட்டதோ அதே போன்று சுறுசுறுப்புடன் சுகாதாரத்துறை இப்போது பம்பரமாக சுழல வேண்டும்.
மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிப்புக்குள்ளாகி அவதியுற்று வரும் நிலையில், மேலும் தொற்று நோய் பரவினால் அதை அவர்களால் தாங்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் ஓரளவு இயல்பு நிலை திரும்பி விட்டதால் மருத்துவ முகாம்களை தாமதமின்றி இப்போதே நடத்த ஆரம்பித்தால் ஓரளவு மழைக்கால தொற்று நோயை கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் அரசு மருத்துவமனைகளிலும் தற்காலிகமாக கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்தி காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கலாம்.












Click it and Unblock the Notifications