Tamilnadu New DGP: தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்? நாளை அறிவிப்பு?
சென்னை: தமிழகத்தின் டிஜிபியாக இருக்கும் சங்கர் ஜிவால் வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் என்பவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக காவல் துறை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு ஓய்வு பெற்றதும் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழக காவல் துறையில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவால், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் ஐபிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
108ஆவது கமிஷனர்
இவர் சென்னையில் 108ஆவது போலீஸ் ஆணையராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் இரு முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றவர். இந்த நிலையில் சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
நாளை அறிவிப்பு
இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிகிறது. தமிழகத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் 1968 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி பிறந்தவர்ய நாகப்பட்டினத்தில் பிறந்தார். பி.ஏ. (வணிகவியல்), எம்.ஏ (பொது நிர்வாகம்) படித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்ச்சி
இவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழக கேடரில் 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி வெளிநாடு செல்லவுள்ள நிலையில் நாளை புதிய டிஜிபி குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது டிஜிபியாக பதவியில் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் டிஜிபி நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
டிஜிபி பதவி
அது மட்டுமல்ல டிஜிபி பதவிக்கு தகுதி வாய்ந்த 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதுவும் ஏற்கெனவே பணியில் உள்ள டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதில் 3 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அரசுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமனம் செய்யும்.
தமிழக அரசு
இது போன்றதொரு பட்டியலை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து பரிந்துரை பட்டியல் இன்னமும் தமிழக அரசுக்கு வரவில்லை. இந்த நிலையில் தமிழகத்திற்கு புதிய டிஜிபிகளாக சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் வாங்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகிய 10 பேரின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பட்டியல் ஏதும் வராத நிலையில் வெங்கட்ராமன், தற்காலிகமாக (மத்திய அரசு பட்டியல் அனுப்பாததால்) புதிய டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
வெங்கட்ராமன் யார்
வெங்கட்ராமன், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். அதிமுக ஆட்சியில் டி.கே.ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை ஏற்று பின்னர் நிரந்தரமாக டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழக தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் புதிய டிஜிபி பதவி நியமனம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications