ஓய்வு நாளிலும் தலைமைச் செயலாளர் ஆய்வு! சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள்! ஆகஸ்ட் வரை தான் கெடு!
சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 3ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் "டிசம்பர் 2023ல் நிகழ்ந்த இரட்டைப் பேரிடர்களின் படிப்பினைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் (Learning from Twin Disasters of December 2023 and Way Forward)" குறித்த ஒரு நாள் கருத்து பரிமாற்றப் பயிலரங்கம் நடைபெற்றது.

இதில் தலைமைச் செயலாளர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (25.02.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மியாட் பாலம் முதல் விமான நிலையம் வரை அடையாறு ஆற்றில் கரையை பலப்படுத்துதல், வெள்ளத்தடுப்புச் சுவர் அமைத்தல், நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, பணியை 31.08.2024க்குள் முன்னதாக முடிப்பதற்கான திட்டங்களை வகுத்திட நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அடையாறு ஆற்றில் கால்வாய் இணைக்குமாறும், நிலத்தைக் கையகப்படுத்தி கால்வாய் அமைக்கும் பணியை மழைக்கு முன் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கொளப்பாக்கம் கால்வாய்-1லிருந்து ஓடை வரை கொளப்பாக்கம்-பொழிச்சலூர் சாலையில் ரூ.11.72 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைக்கு முன்னதாக பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
போரூர் ஏரி 250 ஏக்கர் பரப்பளவிலான மிகப்பெரிய ஏரி. இது சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரம். ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட்டு வந்தபோது, வெள்ளநீரானது மதனந்தபுரம், மௌலிவாக்கம் வழியாக விவசாய நிலங்களில் வடிந்து அடையாறு ஆற்றை அடைந்தது. பின்னர் நகரமயமாக்கல் மற்றும் மேகவெடிப்பு காரணமாக ஐயப்பன்தாங்கல், மாங்காடு, பரணிபுத்தூர், மதனந்தபுரம் போன்ற பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக, போரூர் ஏரி நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. அதனடிப்படையில், 14 இடங்களில் போரூர் ஏரியில் வெள்ளநீர் வடிகால்களை அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு முதலமைச்சர் முதற்கட்டமாக, ரூ.100 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தார். இதில் 4 இடங்களில் வெள்ள நீர் வடிகால்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பருவமழைக் காலங்களில் போரூர் ஏரியின் நீர்மட்டம் உயர தந்திக் கால்வாயில் வரும் அதிகப்படியான வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்கிறது. இதனைத் தடுப்பதற்காக தந்திக் கால்வாய் நீர் போரூர் ஏரிக்கு செல்வதற்கு முன்பாகவே Shutter அமைத்து திசை திருப்பப்படுகிறது. வெள்ள நீர் ஓடும் சாலைகளே வெள்ள நீர் வடிகால்களாக தற்பொழுது மாற்றப்பட்டு, தந்திக் கால்வாயிலிருந்து போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் வரை ரூ.16.70 கோடி மதிப்பில் 700 மீ. நீளத்தில் புதிதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணி (Cut & Cover) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ.39.6 கோடி மதிப்பில் போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல், போரூர் ஏரியிலிருந்து இராமாபுரம் ஓடை வரை 3.3 கி.மீ. நீளத்திற்கு மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, சாலையின் அடியில் வெள்ளநீர் இராமபுரம் ஓடையில் வெளியேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications