அவ்வளவு தான் நம்மல முடிச்சு விட்டீங்க போங்க.. வேட்டு வைத்த விஜய்! வேதனையில் விஎஸ் பாபு! என்னாச்சு?
சென்னை: தமிழக அரசியலில் இந்த தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சி வெற்றிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது கொளத்தூர் தொகுதி முடிவு. பல ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்த அந்த தொகுதியில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்றவர் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு. அதனால் அமைச்சரவை விரிவாக்கம் அறிவிக்கப்பட்டபோது, "இந்த முறை கண்டிப்பாக பாபுவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்" என்ற எதிர்பார்ப்பு தவெக நிர்வாகிகள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் இருந்தது. ஆனால் இறுதியில் வெளியான பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் என்பது சாதாரண தொகுதி அல்ல. பல ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த முக்கிய தொகுதி. அப்படிப்பட்ட தொகுதியில் அவரை நேரடியாக எதிர்த்து வெற்றி பெறுவது மிகப்பெரிய அரசியல் சாதனையாகவே பார்க்கப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு பாபுவின் அரசியல் செல்வாக்கு தவெகவில் அதிகரித்ததாகவும் கூறப்பட்டது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் அவருக்கு தனி ஆதரவு வட்டம் உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் பேசினர்.
விஎஸ் பாபு
இதனால் அமைச்சரவை விரிவாக்கத்தில் அவர் முக்கிய இடம் பெறுவார் என்ற நம்பிக்கை அவருடைய ஆதரவாளர்களிடமும் அதிகமாக இருந்தது. ஆனால் அமைச்சரவை பட்டியல் வெளியானபோது பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. புதிய முகங்கள், இளைஞர்கள், மாவட்ட பிரநிதித்துவம், கூட்டணி கணக்கு என பல அம்சங்களை கவனத்தில் கொண்டு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பாபுவின் பெயர் மட்டும் இடம்பெறவில்லை.
விஜய் அமைச்சரவை
இதனால் அவர் கடும் மனவருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, "சிலரின் தூண்டுதலால் தான் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை" என்று தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் அவர் வேதனை தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாபுவின் அரசியல் பயணம் பல ஏற்றத் தாழ்வுகளை கடந்தது. ஒருகாலத்தில் திமுகவில் வளர்ந்து வந்த இளம் தலைவராக இருந்தார். 2006ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொளத்தூர்
அப்போது திமுகவின் முக்கிய இளைஞர் முகங்களில் ஒருவராகவே பார்க்கப்பட்டார். பின்னர் தொகுதி மறுசீரமைப்பின் போது கொளத்தூர் உருவாக்கப்பட்டது. அந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டபோது, அவருக்காக தேர்தல் பணிகளை தீவிரமாக செய்தவர்களில் பாபுவும் ஒருவர். ஆனால் அதன் பிறகு கட்சிக்குள் அவரின் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சில முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்த பிறகு, பாபு ஓரங்கட்டப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
தவெக
இதனால் அவர் திமுகவை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். ஆனால் அங்கும் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கவில்லை. பின்னர் அதிமுகவில் இணைந்து மாவட்ட செயலாளராக உயர்ந்தார். ஆனால் அங்கும் நீண்ட நாள் நிலைக்க முடியவில்லை. இறுதியில் விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவருடன் இணைந்த பாபு, தவெகவில் முக்கிய முகமாக மாறினார். கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே மிக முக்கியமான கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
மு க ஸ்டாலின்
அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திய பாபு, மு.க.ஸ்டாலினை தோற்கடித்து தமிழக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தார். இதனால் "இந்த வெற்றிக்கான பரிசாக அமைச்சர் பதவி கிடைக்கும்" என்ற எதிர்பார்ப்பு அவரது தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் வேறு அரசியல் கணக்குகள் காரணமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைமையோ அமைச்சரவை அமைப்பில் பல்வேறு சூழல்களை கவனத்தில் கொண்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் பதவி
மாவட்ட பிரதிநிதித்துவம், சமூக சமநிலை, கூட்டணி கட்சிகள், புதிய தலைமுறைக்கு வாய்ப்பு போன்ற காரணங்களால் சில முக்கிய எம்.எல்.ஏ.க்கள் இந்த முறை தவிர்க்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் பாபுவின் ஆதரவாளர்கள் இதை எளிதாக ஏற்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. "ஸ்டாலினை தோற்கடித்தவருக்கே அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றால், கட்சியில் உழைப்பதற்கான மதிப்பு என்ன?" என்ற கேள்வியும் சில இடங்களில் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.












Click it and Unblock the Notifications