சென்னையில் மீண்டும் அதிர்ச்சி.! பெருங்களத்தூரில் ரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து
சென்னை: சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் பயண தேவையை பெரிதும் பூர்த்தி செய்வதில் மின்சார ரயில்களுக்கு பெரும் பங்கு உள்ளது. பேருந்து, பைக்குகளில் பயணித்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அல்லல்பட நேரிடும் என்பதால் பெரும்பாலன பயணிகள் புறநகர் மின்சார ரயில்களையே பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இதனால் ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால், ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வசதிகள் இல்லை என்பது பயணிகள் நீண்ட காலமாக முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. சென்னை நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் ரயில் நிலையத்தில் வைத்தே வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் ரயில் பயணிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது.
அதன்பிறக்கு ரயில் நிலையத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் உறுதி அளித்த போதும் தற்போது வரை அப்படி ஒரு நிலை இல்லை என்பதே பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த மாதம் 19-ம் தேதி இரவு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து ராஜேஸ்வரி என்ற பெண் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் அந்த பெண் உயிரிழந்தார்.
பயணிகள் முன்பாக நடத்தப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதல் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலையில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே இதுபோன்ற குற்ற செயல்கள் நடப்பதற்கு காரணம் என்று ரயில் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ரயிலுக்கு காத்திருந்த தமிழ்ச்ச்செல்வி என்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். செங்கல்பட்டு செல்வதற்காக ரயிலுக்கு காத்திருந்த தமிழ்ச்செல்வியை அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக காயத்துடன் தப்பிய தமிழ்செல்வி, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். ரயில் பயணியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications