3 பைக்.. அரிவாளுடன் 6 பேர்! ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல உணவு டெலிவரி ஊழியர்கள் போல் வந்த மர்ம கும்பல்!
சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இன்று மாலை சென்னை பெரம்பூரில் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் கீரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற்கூராய்வுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். இந்த படுகொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.
ஆர்ம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி மற்றும் அவர்களது தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சட்டம், ஒழுங்கை என்ன செய்வது? ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல வந்து மர்ம நபர்கள் இந்த கொலையை நடத்தியுள்ளனர் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் மொத்தம் 6 பேர் வரை ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications