கருணாநிதி பெயரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்... கொல்லிமலையில் கட்டக் கோரும் சித்த மருத்துவர்கள்..!
சென்னை: கருணாநிதி பெயரில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது சித்த மருத்துவர்கள் முன்னேற்ற சங்கம்.
உணவே மருந்து; மருந்தே உணவு என்ற சித்தர்களின் வாக்கின் அடிப்படையில் சித்த மருத்துவம் முறை இயங்கி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு சித்த மருத்துவத்தின் மகத்துவம் உலகளாவிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

ஆங்கில மருந்துகளுக்கு கட்டுப்படாத எத்தனையோ அரிய வகை நோய்கள் கூட சித்த மருத்துவ சிகிச்சை முறையால் குணம் அடைந்தது என்பதை நம்மில் பலரும் கேட்டோ, உணர்ந்தோ இருக்கலாம். இந்நிலையில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதுவும் மூலிகைகளின் முகவரியான கொல்லிமலையில் இந்த சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றும் அதற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் எனவும் சித்த மருத்துவர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கோரிக்கை மனுவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கொடுத்த அச்சங்கத்தினர், கொல்லிமலை என்பது சேலம், திருச்சி ஆகிய இரண்டு பெருநகரங்களுக்கும் அருகாமையில் இருப்பதால் விமானச்சேவை, ரயில்சேவை, என வந்து செல்வோருக்கு வசதியாக இருக்கும் என்றும் தனி பல்கலை.மூலம் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை மேம்படுத்த முடியும் எனவும் எடுத்துரைத்துள்ளனர்.
இதேபோல் சித்த மருத்துவ மருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அதிகரிக்கும் வகையில் அரசு சார்பில் மூலிகை வளர்ப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
உலகின் மற்ற பகுதிகளில் எது எப்படியோ ஆனால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வர சித்த மருத்துவ முறை மிக முக்கியப் பங்காற்றியது.இதனால் இந்த புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழக கோரிக்கையை நிராகரிக்காமல் பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.
விரைவில் இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நல்ல அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications