"விடிய விடிய ஏசி.." உடலில் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுமாம்.. தப்பிக்க என்ன செய்யணும் தெரியுமா!
சென்னை: கோடை வெயில் கொளுத்தும் சூழலில், நம்மில் பலரும் இரவு நேரத்தில் முழுமையாக ஏசி போட்டுவிட்டு, தூங்குகிறோம். இருப்பினும், இதுபோல இரவு முழுக்க ஏசியை ஓடவிடுவது நல்லது இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள். இதனால் உடலில் பலவித பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். ஏசியை இரவு முழுக்க ஓடவிடுவதால் வரும் சிக்கல் என்ன.. இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கோடை வெயில் கொளுத்தும் இந்தச் சூழலில், ஏசி என்பது ஆடம்பரப் பொருள் என்பதிலிருந்து மாறி அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. அலுவலகம் முதல் வீடு வரை ஏசியின் குளுமை நமக்கு இதமாக இருந்தாலும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஆரோக்கியச் சிக்கல்களை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

ஏசி ரூம்
குறிப்பாக, நம்மில் பலரும் இரவு நேரத்தில் ஏசி ரூமில் தான் படுக்கிறோம். பலரது வீடுகளில் விடிய விடிய ஏசி ஓடிக் கொண்டே இருக்கும். ஏசி இல்லை என்றால் பேன் எவ்வளவு வேகத்தில் ஓடினாலும் பலருக்குத் தூக்கம் வராது. இதனால் இரவு முழுக்க ஏசியுடன் தூங்கும் பலரது வீடுகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இதுபோல இரவு முழுக்க ஏசியை ஓடவிடுவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
7 சிக்கல்கள்
- சருமம் மற்றும் கண் வறட்சி: ஏசி காற்றில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருக்கும். 8 மணி நேரத்திற்கும் மேலாக ஏசி அறையில் இருப்பவர்களுக்குச் சருமம் வறண்டுவிடும். கண்கள் வறட்சியடைந்து எரிச்சல் மற்றும் சிவத்தல் ஏற்படலாம்.
- சுவாசக் கோளாறுகள்: ஏசி அறையில் கதவு, ஜன்னல்கள் மூடப்பட்டிருப்பதால் ஒரே காற்றுதான் சுழன்று கொண்டிருக்கும். ஏசி ஃபில்டர்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், அதில் வளரும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்சனைகளைத் தீவிரப்படுத்தும்.
- வறட்டு இருமல் மற்றும் தொண்டை எரிச்சல்: ஏசியிலிருந்து வெளிவரும் வறண்ட காற்று சுவாசப் பாதையைப் பாதித்து, நீண்ட நாள் நீடிக்கும் வறட்டு இருமலை உண்டாக்கும்.
- உடல் சோர்வு மற்றும் மூட்டு வலி: இரவு முழுவதும் ஏசியில் தூங்குவது ரத்த ஓட்டத்தைச் சற்று மந்தமாக்கலாம். இதனால் காலையில் எழுந்திருக்கும்போது உடல் சோர்வாகவும், சிலருக்குக் கழுத்து அல்லது மூட்டு வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- சைனஸ் மற்றும் தலைவலி: ஏசியின் அதீத குளிர்ச்சியால் மூக்கின் உட்புறம் வறட்சியடைந்து, சைனஸ் கோளாறுகள் உள்ளவர்களுக்குத் தலைவலி மற்றும் மூக்கடைப்பு அதிகரிக்கும்.
- காது வலி: ஏசி வென்ட்களிலிருந்து வரும் நேரடிக் குளிர் காற்று தொடர்ந்து உங்கள் மீது படும்போது, அது காதுகளைப் பாதித்து, அசௌகரியம் அல்லது வலியைக்கூட ஏற்படுத்தக்கூடும்.
- வெப்பநிலை சீர்குலைவு: ஏசி காற்று உடலுக்குள் ஊடுருவும்போது, அது உடலை அதிகப்படியாகக் குளிர்விக்கக்கூடும். இது உடலின் இயற்கையான வெப்பநிலை சீராக்கும் வழிமுறைகளைப் பாதிக்கலாம்.
தப்பிக்க என்ன வழி?
ஏசியை எப்போதும் 20°C முதல் 25°C வரையிலான வெப்பநிலையில் வைப்பதே ஆரோக்கியமானது. இது உடலின் இயற்கையான வெப்பநிலைக்கு நெருக்கமாக இருக்கும். இரவு நேரம் முழுமையாக ஏசியை ஓட விட வேண்டாம். இப்போது வரும் பல நவீன ஏசிக்களில் டைமர் வசதி உள்ளது. இதை வைத்து 2 மணி நேரத்தில் தானாக ஏசி அணைந்துவிடும்படி செட் செய்யுங்கள். மேலும், மாதம் ஒருமுறையாவது ஏசி ஃபில்டர்களைச் சுத்தம் செய்வது கிருமிகள் பரவுவதைத் தடுக்கும்.












Click it and Unblock the Notifications