சைலண்ட் ஓட்டு யாரை கவிழ்க்க போகிறது? தமிழக அரசியலில் விஜய் பெயர் ஏன் அதிகம் பேசப்படுகிறது?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிவாகியுள்ள 85% வாக்குப்பதிவு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தவெக ஏற்படுத்தியுள்ள தாக்கம், ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பையுமே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து கூறியுள்ளார்.. இவர் சொல்வது ஏற்புடைய கருத்தா?
மூத்த பத்திரிகையாளர் மணி, ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், "85 சதவீதம் என்ற வரலாறு காணாத வாக்குப்பதிவுக்கு "விஜய் ஃபேக்டர்" மற்றும் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவையே பிரதான காரணங்கள்" என்கிறார்.

"விஜய் ஃபேக்டர்" உண்மையா
அந்தப் பேட்டியில் மணி பேசும்போது, "விஜய் உருவாக்கிய அரசியல் தாக்கமும், ஆளுங்கட்சிக்கு எதிரான மறைமுக மனநிலையும் சேர்ந்து இந்த அதிக வாக்குப்பதிவை உருவாக்கியிருக்கலாம். 'விஜய் ஃபேக்டர்' இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை அதிகமாக வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு வந்திருக்கலாம்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், "அஇஅதிமுக வாக்கு வங்கியில் தவெக குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம், அதே நேரத்தில் திமுகவின் வாக்குகளிலும் ஒரு அளவுக்குச் சிதறலை ஏற்படுத்தியிருக்கலாம். இந்தச் சூழலில், அதிக வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்குச் சவாலாக மாற வாய்ப்புள்ளது" என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறம் vs கிராமப்புறம்
பத்திரிகையாளர் மணி சொல்வது உண்மையிலேயே சரியான கூற்றா? அரசியல் வட்டாரங்கள் என்ன சொல்கின்றன? இங்கே சற்று விரிவாக பார்ப்போம்.
1977-ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய அதே போன்ற ஒரு தாக்கத்தை இளைஞர்கள் மத்தியிலும், முதல்முறை வாக்காளர்கள் மத்தியிலும் விஜய்யால் ஏற்படுத்த முடிந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த 85% வாக்குப்பதிவு என்பது வெறும் நம்பர் கிடையாது, அது மாற்றத்தை விரும்பும் மக்களின் வேகம்.
பத்திரிகையாளர் மணி குறிப்பிட்டது போல, விஜய்யின் பலம் தற்போது நகர்ப்புறங்களில் அதிகமாகத் தெரிகிறது. ஆனால், கிராமப்புறங்களில் இன்னும் அதிமுக மற்றும் திமுகவின் அடிமட்டக் கட்டமைப்பு அதாவது Infrastructure எக்கச்சக்க வலுவாகவே உள்ளது. விஜய் அந்த வாக்குகளை எந்த அளவுக்குத் தன் பக்கம் இழுத்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவர் கிங் ஆவாரா அல்லது கிங் மேக்கர் ஆவாரா என்பது தெரியும்.
வாக்குச் சிதறல் யாருக்குப் பலம்?
பொதுவாக வாக்குகள் பிரியும் போது அது ஆளுங்கட்சிக்கே சாதகமாக முடியும் என்பது ஒரு அரசியல் கணக்கு. ஆனால், இங்கு விஜய் பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் அதிருப்தி வாக்குகளாக இருந்தால், அது திமுகவிற்குச் சாதகமாகலாம். ஒருவேளை அவர் நடுநிலை வாக்குகளையும், திமுகவின் வாக்கு வங்கியையும் கணிசமாகச் சிதைத்திருந்தால், முடிவுகள் தலைகீழாக மாற வாய்ப்புண்டு.
85% வாக்கு... ஆனால் யாருக்காக என்பதுதான் இங்கு அனைவருக்குமான கேள்வி.. விஜய்யின் ரசிகர்கள் வெளிப்படையாகத் தெரிந்தாலும், குடும்பத் தலைவிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அமைதியாகப் போட்ட வாக்குதான் இங்கு உண்மையான எக்ஸ் ஃபேக்டர்..!!
"சைலண்ட் ஓட்டுகள்" எங்கே போனது
இந்த "சைலண்ட் ஓட்டுகள்" யாருக்கு சென்றது என்பதுதான் தேர்தல் முடிவைத் தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டது. ஒருவேளை இந்த மறைமுக வாக்குகள் விஜய் பக்கம் சென்றிருந்தால், அது சாதாரண வெற்றி அல்ல, முழு அரசியல் சமன்பாட்டையே மாற்றும் அலையாக மாறலாம்.
ஏனென்றால், இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான போட்டி அல்ல, தமிழகத்தின் அடுத்த பெரிய சூப்பர் ஸ்டார் அரசியல்வாதி யார் என்பதை முடிவு செய்யும் தருணமாக மாறியுள்ளது. அதனால் 85% வாக்குப்பதிவு என்பது ஒரு வெறும் எண் மட்டுமே கிடையாது, அது ஒரு வார்னிங் சிக்னல்... மே 4ம் தேதி வெளியாகும் முடிவுகளில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்!














Click it and Unblock the Notifications