விலை பறக்குது ஓகே.. ஆனாலும் "இவர்கள்" மட்டும் வெள்ளியில் பணத்தை போடவே கூடாது.. பிரபலம் தந்த வார்னிங்
சென்னை: இந்தாண்டு தங்கத்தை விடவும் வெள்ளியின் விலை புலிப்பாய்ச்சலாகப் பறக்கிறது. வெள்ளி விலை இந்தளவுக்கு உயர என்ன காரணம் என்பது புரியாமல் மக்கள் இருக்கிறார்கள். வெள்ளி விலை இந்தளவுக்கு உயர என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன.. வெள்ளியில் இப்போது முதலீடு செய்யலாமா என்பது குறித்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் பொதுவாக மக்கள் தங்கத்தை அதிகளவில் வாங்குவார்கள். ஆனால், இந்த ஆண்டு வெள்ளியின் விலை ஏற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலகளவில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளதால், வெள்ளியின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் வெள்ளி விலை கிட்டத்தட்ட 75% உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வெள்ளி விலை
பல்வேறு காரணங்களால் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளதே இதற்குப் பிரதான காரணமாகும். இந்தியாவில் ஒரு கிலோ வெள்ளி சுமார் ₹2 லட்சத்தைத் தாண்டி, ஒரு புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
அதிகரிக்கும் தேவை, சப்ளை சங்கிலியில் இருக்கும் பிரச்சினை உள்ளிட்டவை காரணமாக வெள்ளி விலை அதிகரிக்கிறது. மக்களில் கணிசமானோர் வெள்ளியைப் பாதுகாப்பான முதலீடாகவும் கருதுகிறார்கள். அதுவும் வெள்ளி விலை அதிகரிக்கப் பிரதான காரணமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு தங்கத்தை மிஞ்சும் அளவுக்கு வெள்ளி விலை பறக்கிறது.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக ஆக்மண்ட் கோல்ட் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் டாக்டர் ரேனிஷா சயினானி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "வெள்ளி விலை தற்போதைய சூழலில் தொடர்ந்து உயரும் என்றே தெரிகிறது. அதேநேரம் ப்யூச்சரஸ் வெள்ளி சரிந்தால்.. வரும் வாரங்களில் வெள்ளி விலை 4-5% வரை சரியலாம்" என்றார்.
தங்கம் என்பது பெரும்பாலும் எதற்கும் யூஸ் ஆகாது. அதிகபட்சம் நகை செய்து போடலாம் அல்லது முதலீடாக வைக்கலாம்.. அதில் தொழிற்துறைக்கு எந்தவொரு பலனும் இல்லை. அதேநேரம் வெள்ளி அப்படி இல்லை.. சூரிய மின் தகடுகள், மின்சார வாகனங்கள், செயற்கை நுண்ணறிவு ஹார்ட்வேர் மற்றும் 5G உள்கட்டமைப்பு என பல நவீன தொழில்நுட்பங்களுக்கு வெள்ளி தேவைப்படுகிறது. அதாவது தொழிற்துறைக்கு இப்போது வெள்ளி அதிகமாகவே தேவைப்படுகிறது. இதுவும் வெள்ளி விலை அதிகரிக்கப் பிரதான காணமாக இருக்கிறது.
புதிய உச்சம்
வெள்ளி விலை இந்த ஆண்டு சுமார் 75% உயர்ந்துள்ளது தொடர்பாகப் பேசிய ரேனிஷா, "மக்கள் வெள்ளியை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருத ஆரம்பித்துள்ளனர். சப்ளை பிரச்சினையும் இருக்கிறது. இந்த இரண்டுமே சேர்த்தே வெள்ளி விலையை எங்கோ கொண்டு போய்விட்டது. கையிருப்பு வெள்ளி குறைந்துவிட்டது. சில இடங்களில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஸ்பாட் வெள்ளி விலைகள் வெள்ளி ப்யூச்சர்ஸை விட அதிகமாக இருக்கிறது.
யார் முதலீடு செய்யக்கூடாது
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு ஆகியவை இப்போது வெள்ளி விலை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. அதேநேரம் விலை இதனால் தாறுமாறாக அதிகரித்துவிட்டது. மறுபுறம் காசாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் போன்ற புவிசார் அரசியல் பதட்டங்கள் தணியும் அறிகுறி தெரிகிறது. இதனால் குறுகிய காலத்தில் வெள்ளியில் லாபம் பார்க்கலாம் என முதலீடு செய்ய நினைப்போர் இப்போது தவிர்ப்பது நல்லது" என்றார்.
அதாவது கடந்த சில வாரங்களில் வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்தது.. வரும் காலங்களிலும் வெள்ளி அதேபோல உயரும். இதனால் சில வாரங்களில் பெரிய தொகையை லாபம் பார்க்கலாம் என்று நினைத்துப் போட்டால் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றே எச்சரித்துள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications