2வது தளத்தில் விலையுயர்ந்த பொருட்கள்.. எல்லாத்தையும் திருடிட்டாங்க.. பார்த்ததும் ஷாக் ஆன சண்முகம்!
சென்னை : அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்த வெள்ளி வேல், வெள்ளி செங்கோல்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்போடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் இன்று அகற்றப்பட்டது.
இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அலுவலகத்திற்குள் சென்று பார்வையிட்டனர்.

அதிமுக தலைமை அலுவலகம்
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமியிடம் சாவி
இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சீலிடப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தர வேண்டும். பாதுகாப்பு கருதி ஒரு மாத காலத்துக்கு கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

10 நாட்களுக்குப் பிறகு சீல் அகற்றம்
இந்நிலையில் கோட்டாட்சியர் , வட்டாட்சியர் தலைமையில் போலீஸ் பாதுகாப்போடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் அகற்றினார். கடந்த 11ம் தேதி நடந்த மோதலால் சீல் வைக்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு பிறகு அகற்றப்பட்டுள்ளது.

சாவி ஒப்படைப்பு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றிய வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த மேலாளர் மகாலிங்கத்திடம் வழங்கினார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி, மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் அலுவலகத்திற்குள் சென்று சேதமடைந்த பொருட்களைப் பார்வையிட்டனர்.

கடுமையான சேதம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளே இருந்த பொருட்கள் மற்றும் சேர்கள் உடைக்கப்பட்டு, அலுவலகமே போர்க்களம் போல் இருந்ததை பார்த்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சேதமடைந்த பொருட்களின் விவரங்களை அதிமுக தலைமை அலுவக நிர்வாகிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

கணினிகள் சேதம்
அதிமுக நிர்வாகிகள் பற்றிய தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கணினிகள் முழுமையாக சேதப்படுத்தப் பட்டிருப்பதாகவும், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதாகவும் அதிமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

வேல், செங்கோல் காணவில்லை
அலுவலகம் முழுவதும் பார்வையிட்ட அதிமுக எம்.பி சி.வி.சண்முகம், அதிமுக தலைமை அலுவலகத்தின் 2-வது தளத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களைக் காணவில்லை என்றும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட வெள்ளி வேல், செங்கோல்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோய்விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications