பல லட்சம் ஃபைன்.. சென்னைவாசிகளுக்கு ஸ்டிரிக்ட் ரூல்ஸ்.. கண்டிப்பு காட்டும் மாநகராட்சி நிர்வாகம்!
சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தை அரசு செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கும் நிலையில் மாநகராட்சியை சுத்தமாக வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடற்கரைகள்
முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

சென்னை
கடந்த இரண்டு மாதமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் நீக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் எங்கும் சுவரொட்டி ஒட்ட கூடாது, தேவையின்றி விளம்பர பெயிண்ட்கள் அடிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் அலங்கார பெயிண்ட்கள் அடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சாலையில் குப்பை போடுபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

குப்பை
சாலையில் குப்பை போட கூடாது. குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும். வீட்டில் இருக்கும் குப்பைகளை காலையில் வரும் மாநகராட்சி குப்பை வண்டிகளில் மட்டுமே போட வேண்டும். வெளியே பொது இடங்களில் வீச கூடாது என்று சென்னை மாநகராட்சி கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக அதிகாரிகளை நியமித்து குப்பை போடுபவர்களையும், விதிகளை மீறுபவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அபராதம்
இந்த நிலையில்தான் சென்னையில் கடந்த மூன்று நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.6.43 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் குப்பைகள், மற்றும் கட்டுமான கழிவுகளை பொது இடங்களில் கொட்டி உள்ளனர். இதை தீவிரமாக கண்காணித்து வந்த அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

அதிகம்
சென்னையில் குப்பை போடுவதற்காக 3 நாட்களில் இவ்வளவு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை. சென்னையில் குப்பை போடுவதற்கு எதிராக தீவிரமாக விதிகளை கடைபிடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிகளை கண்டிப்புடன் கண்காணித்து வருகிறோம். குப்பைகள், மற்றும் கட்டுமான கழிவுகளை பொது இடங்களிலோ, நீர் நிலைகளிலோ வீச கூடாது. வீசினால் குப்பைகளை பொறுத்து அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications