வேல்முருகன் "கை" வச்சிட்டாராமே.. விழித்த ஆபீசர்! சென்னை விருகம்பாக்கம் மெயின் ரோட்டில் ஒரே பரபரப்பு
சென்னை: பாடகர் வேல்முருகன் மீது போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் சென்றிருக்கிறது.. என்ன நடந்தது?
சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், சென்னை வடபழனி, விருகம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.. இதன்காரணமாக, அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், மெட்ரோ ஊழியர்களும், அங்கே இரவு நேரங்களில் தடுப்பு அமைத்து ஒருவழிப்பாதையாக மாற்றியிருக்கிறார்கள்.
பேரிகாட்: இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் தன்னுடைய காரில் அந்த வழியாக சென்றுள்ளார்... விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே பேரிகாட் போட்டு ஒருவழிப்பதையாக மாற்றப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்..
உடனே, அங்கிருந்த மெட்ரோ ஊழியர்களிடம் "எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சாலையை மூடி வேலை செய்வதாககூறி அவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.. ஊழியர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் வேல்முருகன் சமாதானம் ஆகவில்லை. அப்போது இதுகுறித்து கேட்க வந்த மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேல் என்பவரை, வேல்முருகன் அவதூறான வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. பதிலுக்கு அதிகாரி வடிவேலுவும் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
படுகாயம்: ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த வேல்முருகன், ஆபீசர் வடிவேலுவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வடிவேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சென்ற வடிவேலு, நடந்த சம்பவம் குறித்து, விருகம்பாக்கம் போலீசிலும் புகார் தந்திருக்கிறார். இந்த புகாரின் பேரில்தான், விருகம்பாக்கம் போலீசார் தற்போது தீவிர விசாரணையை கையில் எடுத்திருக்கிறார்களாம்.
ஏற்கனவே, இப்படித்தான், சென்னை ஏர்போர்ட்டிலும் கடந்த மாதம் மதுபோதையில் பிரச்சனை செய்திருந்தார்.. வேல்முருகன் திருச்சி செல்ல வேண்டியிருந்ததால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்.. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் அவரை, வழக்கமான சோதனை செய்தார்களாம்.. அந்த நேரம் வேல்முருகன் மதுபோதையில் இருந்தது தெரியவந்திருக்கிறது.
மதுபோதை: அதனால், பாதுகாப்பு படை வீரர்கள் சம்மந்தப்பட்ட தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு தகவல் அளித்ததுடன், வேல்முருகன் மதுபோதையில் இருந்ததால் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவும் மறுத்துள்ளார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்திருக்கிறார்.. இறுதியில், வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம். அதற்கு பிறகே, பாதுகாப்பு படை வீரர்கள் அவரை வேறு விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்களாம். விமான நிலையத்தில் வேல்முருகன் மதுபோதையில் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாகவும் வெளியாகி அப்போது பரபரப்பை தந்திருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications