அரசியல் குறித்து ஸ்ரீதர் வேம்பு பதிவு.. அதற்கு கீழே தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்ட பதிவு
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஜோஹோ கார்ப்பரேஷன் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப சேவைகளை செய்து வருகிறது. மிகப்பிரபலமான ஐடி நிறுவனமாக இருக்கிறது. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் நிறுவனாமாக ஜோஹோ கார்ப்பரேஷன் இருக்கிறது. இந்த நிறுவனத்தை தொடங்கிய ஸ்ரீதர் வேம்பு , தற்போத தனது சொந்த ஊரான தென்காசியில் வாழ்ந்து அங்கு கிராமப்புற மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஸ்ரீதர் வேம்பு தனது சொந்த ஊர் மக்களுடன் பேசி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்து வருகிறார். தற்போது பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். அண்மையில் கோமியத்திற்கு ஆதரவாக வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு விரைவில் அரசியலில் சேர உள்ளதாகவும், அவர் பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் உலா வந்தன. அந்த வதந்திகளுக்கு நடுவில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஸ்ரீதர் வேம்பு 'ஜோஹோ'வின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார்.

அப்போது அப்போது வெளியிட்ட பதிவில், AI தொழில் நுட்பத்தில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட முக்கிய அப்டேட்கள் உட்பட பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாங்கள் எதிர்கொள்வதைக் கருத்தில் கொண்டும், எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டுப் பணியைத் தொடர்வதோடு, R&D முயற்சிகளிலும் முழு நேரமும் கவனம் செலுத்துவது சிறந்தது என்று நினைக்கிறேன். அதன் காரணமாக நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் டேவி குழுமத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுவார் என்று ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
இந்த நிலையில் தான் பாஜகவில் ஸ்ரீதர் வேம்பு சேரப்போவதாக செய்திகள் அதிகமாக பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் இன்று காலை விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில் ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், "நான் அரசியலில் சேருவது பற்றி ஒரு 'செய்தி' பரவி வருவதாகக் கேள்விப்பட்டேன். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அடுத்த வாரம் ஆஸ்டினில் (அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரம்) தொழில்துறை ஆய்வாளர்கள் குழுவிற்கு AI பற்றிய எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்திகளை வழங்க நான் இப்போது கடுமையாக உழைத்து தயாராகி வருகிறேன். விரைவில் அதற்காக நான் அங்கு செல்ல போகிறேன்.
தற்போது எனக்கு ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அதனை வளர்த்தெடுக்கும் துறையில் எனக்கு இப்போது மிகவும் சவாலான புதிய பங்கு இருக்கிறது. இதை தாண்டி வேறு எதுவும் இல்லை. எனக்கு அரசியலுக்கு நேரமில்லை. அதற்கு மேல், நான் அரசியலில் சேருவது பற்றி யாருடனும் எந்த விவாதமும் நடத்தவே இல்லை. இந்த பதிவு,அதை தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன். மீண்டும் உங்கள் வேலைகளை பாருங்கள்" இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியிருந்தார்.

இந்த பதவிற்கு கீழ் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்ட பதிவில், " நம்முடைய தேசத்திற்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கும், தொழில்நுட்ப மாற்றத்தை எளிதாக்குவதற்கும், நமது மரியாதைக்குரிய பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, ஒவ்வொரு இந்தியரையும் எல்லைகளுக்கு அப்பால் வளப்படுத்தவும், தாய் நாட்டை வளர்ந்த நாடாகக் காணவும் உங்கள் மூளை காப்பீடு செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications