சென்னை திருவொற்றியூரில் அசுர வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள்.. துடிதுடித்து பலியான அக்காள் தங்கை
சென்னை திருவெற்றியூரில் அசுர வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள்.. துடிதுடித்து பலியான அக்காள் தங்கை
சென்னை திருவொற்றியூரில் எண்ணூர் விரைவு சாலையை கடந்து செல்ல முயன்ற போது இருசக்கர வாகனம் மோதி அக்காள்-தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேரை தண்டையார் பேட்டை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் ஒண்டிகுப்பத்தைச் சேர்ந்த 38 வயதாகும் பவானி, 37 வயதாகும் சுபா ஆகியோர் அக்காள், தங்கை ஆவார். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். பவானி, சுபா இருவரும் அந்த பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள்.
காசிமேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல பவானியும், சுபாவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த வியாழக்கிழமை எண்ணூர் விரைவு சாலையில் ஆட்டோவில் ஏறுவதற்காக சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது அந்த சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஒன்று வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் சுபா, பவானி இருவர் மீதும் இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுபா சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சுபாவின் அக்கா பவானி, படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார், பவானியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பவானி இறந்து போனார்.
இதையடுத்து சென்னை தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தனர். விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்த பரத் (20) மற்றும் ஏழுகிணறு சீனிவாச பிள்ளை தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கைதான மாணவர்கள் பரத் மற்றும் மீது பாலகிருஷ்ணன் மீது அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல், கொலையாகாத மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அசுர வேகத்தில் மோட்டார் சைக்களில் வந்த இளைஞர்கள், மோதியதில், அக்காள்- தங்கை உயிரிழந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications